அச்சம் விடுங்கள்; அறிவைத் தேடுங்கள் !

19 Jun 2011

சோழன் ஆட்சி பொற்காலமா,துயரமா?




இராஜராஜ சோழன் ஆட்சி பொற்காலமா, துயரமா?

(விவசாயிகள் சிவ துரோக பட்டத்திலிருந்து தப்புவதற்காகவும் தமது பெண்டிரை ஆலய தாசி வேலைக்கு நேர்ந்து விட்ட கொடுமையும் சோழர் கால பொற்கால ஆட்சியில்தான் நிகழ்ந்தது.)



தமிழக அரச சார்பில் தஞ்சை பெரிய கோவிலை கட்டியதற்கு ஆயிரமாண்டு நிறைவு விழா நிகழ்த்தப் பெற்றது. மக்களாட்சிக்கு நிகரான நிர்வாகத்தையும், மக்கள் நல திட்டங்களையும் செயல்படுத்திய ராசராசனின் ஆட்சியை போல மத்தியிலும் மாநிலத்திலும் நல்லாட்சி நடைபெறுவதாக காங்கிரசு தலைவர் வாசன் கூறுகிறார். மக்களாட்சியை திறம்பட நடத்தியவன் ராசராசன் என்கிறார் கருணாநிதி. வரி கட்ட முடியாதவர்களின் நிலம் பறிக்கப்பட்டு கருவூலத்தில் சேர்க்கப்பட்டதாகவும் சொல்கிறார். கோவிலை கட்டுவது பெரிதல்ல தொடர்ந்து அதனை நிர்வகிப்பதுதான் சிரமம் என்கிறார் கனிமொழி.

ஆனால் தமிழனுக்கு வரலாறு இல்லை, எனவே குழு அமைத்து வரலாறு எழுத வேண்டும் என்கிறார் அமைச்சர் துரைமுருகன். தமிழ் மொழியே ஒரு வரலாறுதானே. தமிழை முடக்க நினைத்தவர்களிடமிருந்து திருமறைகளை மீட்டவன் ராசராசன், வடமொழியில் பாடுபவர்களை விட அதிக அளவில் ஓதுவார்களை பெரிய கோவிலில் நியமித்தான், ஒரு கலாச்சார மாற்றத்தை தடுத்து நிறுத்தினான் என்கிறார் அன்பழகன்.

பிற்காலத்தில் இன உணர்வு மங்கியதால் சமஸ்கிருத ஆதிக்கம் மிகுந்ததாகவும் அதனை 20 ஆம் நூற்றாண்டின் இன உணர்வு மீட்டெடுத்ததாகவும், அந்த போராட்டத்தின் விளைவாகத்தான் இன்று ஆலயங்களில் தமிழில் வழிபாடு கட்டாயமாக்கப்பட்டது என்றும் ஸ்டாலின் பேசுகிறார்.

திருமறைகளை கண்டெடுத்ததாக சொல்லப்படும் சிதம்பரத்திலேயே மனித உரிமை பாதுகாப்பு மையமும், சிவனடியார் ஆறுமுகசாமியும் இரத்தம் சிந்தி போராடித்தான் தமிழில் வழிபடும் உரிமையை பெற்றனர் என்பது சமகால வரலாறு. வரலாறு இல்லாமல் எந்த சமூகமும் இல்லை. ஆனால் வரலாற்றை திரிக்க நினைக்கும் ஆளும் வர்க்கம் மேற்கண்டவாறு முரண்பாட்டுடன் பேசுவது இயல்பே.

பெரிய கோவிலின் கல்வெட்டுக்களில்தான் தமிழகத்தில் முதன்முதலாக சமஸ்கிருதம் அச்சேறியது. முன்னர் தானமளிக்கப்பட்டு களப்பிரர் காலத்தில் பிடுங்கப்பட்ட நிலங்களை மீண்டும் பார்ப்பனர்களுக்கே வழங்கியது சோழர் ஆட்சிதான். போரில் தோற்றவர்களில் இருந்தும் வரி கட்ட முடியாமல் போன குடியானவ வீடுகளில் இருந்தும் தகுதியான பெண்களை தெரிவு செய்து, உடலில் சூடும் போட்டு, கல்வெட்டுகளில் பெயரையும் பதிவு செய்து சுமார் 400 பேரை பெரிய கோவிலில் தேவரடியார் என்ற தாசி தொழிலில் ஈடுபடுத்தியவன் ராசராசன். மீந்த பெண்களை பெரிய கோவிலின் கொட்டாரத்தில் நெல் குற்ற அனுப்பினான்.


சோழர் காலத்தில் நீர்ப்பாசன வசதியை தனது கைப்பிடியில் வைத்திருந்தது கோவில் நிர்வாகமே. அன்றைய ஆளும்வர்க்கமான பார்ப்பன மற்றும் வெள்ளாள சாதிக்கு போக மீந்த ஆற்று மற்றும் ஏரி நீர்தான் குத்தகை விவசாயிகளுக்கு. அதுவும் அவர்களுக்கு தோதான நேரத்தில்தான் அளிக்கப்பட்டது. எனவே விளைச்சல் குறைவதும், வரியோ பார்ப்பன வேளாள சாதிகளின் நில விளைச்சலுக்கு நிகராக இருப்பதும் தவிர்க்க முடியாத துயரமானது.


வரி கட்ட முடியாதவர்களுக்கு சிவ துரோகி என்ற பட்டமளித்து, அவர்களது நிலத்தை விற்று மைய அரசிடம் சமர்ப்பித்தது ஊர் சபை. அந்த விற்பனைக்கு ராசராசனும் அவனது தமக்கையும் பணம் அளித்ததை கல்வெட்டுகள் பல ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன. அந்த நிலங்கள் ஆலயத்திற்கு சொந்தமான தேவ தானங்களாகவும், பிராமணர்களுக்கு சொந்தமான பிரம்மதேயங்களாகவும் மற்றும் வேதகல்விச் சாலைகளுக்கான மானியத்திற்காக ஏற்படுத்தப்பட்ட சதுர்வேதி மங்கலங்களாகவும் பின்னர் மாற்றப்பட்டது.

அதே நேரத்தில் வரிகட்ட முடியாத ஏழை குத்தகை விவசாயிகள் சிவ துரோக பட்டத்திலிருந்து தப்புவதற்காகவும் தமது பெண்டிரை ஆலய தாசி வேலைக்கு நேர்ந்து விட்ட கொடுமையும் சோழர் கால பொற்கால ஆட்சியில்தான் நிகழ்ந்தது.
பார்ப்பனர்களுக்கு ஒதுக்கப்படும் நிலங்கள் ஏற்கெனவே வளமான நெல் விளையும் பூமியாகவும், தேவரடியார்களுக்கு வழங்கப்பட்டது முதன்முதலாக விவசாயத்திற்காக திருத்தப்பட்ட தரிசு நிலமாகவும் இருந்ததை கல்வெட்டுக்களின் வழி அறிய முடிகிறது.

அதிலும் நக்கன் போன்ற உயர்சாதி பெண்கள் தம்முடன் சொத்தாக பெற்று வரும் நிலத்திற்கு வரிவிலக்கு பெறுவதால் அவர்களே ஒரு கொடையாளியாகவும், வட்டிக்கு கடன் கொடுக்கும் லேவாதேவிக்காரராகவும் இருந்தனர். ஆனால் தாழ்த்தப்பட்ட குத்தகை விவசாயிகளின் பெண்டிருக்கோ அரசு ஒரு வேலி நிலம் தரும். பயிரிடும் அவர்களது தந்தையால் வரி கட்ட முடியாமல் மீண்டும் சிவதுரோகி ஆவதும் தொடர்ந்தது. இதனை அடுத்து வந்ததுதான் சதுரி மாணிக்கம் போன்ற பெண்களின் கோபுர தற்கொலைகளும் தொடர்ந்து வந்த மக்களது கலகங்களும்.

பெரிய காற்றளி கோவில், பெரிய விமானம், பெரிய நந்தி, பெரிய சிவலிங்கம், பெரிய பிரகாரம் என பெரிய கோவில் பெரிதாக மாத்திரமே திகழ்வதால் பெரிதினும் பெரிது கேள் என்பதற்கு இலக்கணமே ராசராசன்தான் என்கிறார் முன்னாள் துணைவேந்தர் ஔவை நடராசன். பேரரசு ஒன்று தோன்றியதும் இப்போதுதான். சுயசார்புள்ள கிராமத்தின் குறைந்த உபரியை மாத்திரமல்ல அதன் சுயசார்பையும் உறிஞ்சிதான் கோவிலும் பேரர‍சும் செழித்தது. 12 சதவீத வட்டிக்கு பணம் தரும் லேவாதேவி வேலையையும் வட்டி வசூலிக்க ஒரு படையையும் வைத்திருந்த பெரிய கோவிலைத்தான் பகைவர்களின் தாக்கதலில் இருந்து காப்பதற்காகவும் கட்டியிருப்பார்கள் என்கிறார் அன்பழகன்.

ஊர்சபையில் நிலம் வைத்திருப்பவன் மாத்திரம்தான் உறுப்பினராக முடியும். கோவில் பண்டாரம் ஆக கூட குறைந்த பட்ச தகுதி நிலம்தான். மன்னார்குடி ஊர்சபையே கூட வரி கட்ட முடியாமல் தாங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக போக இருப்பதாக தீர்மானம் இயற்றியிருக்கிறார்கள் என்றால் வரியின் கொடுமையை தனியாக சொல்ல வேண்டுமா என்ன?
நந்தா விளக்கு எரிப்பதற்காக ராசராசன் நாற்பது சாவாமூவா பேராடுகளை (எப்போதும் எண்ணிக்கை மாறாத வகையில் இறந்தவற்றுக்கு பதில் புதியதை வாங்கி விட வேண்டும்) கோவிலுக்கு தானமளிக்கிறான். தினமும் உழக்கு நெய் கொடுத்து விட்டு மீந்தவற்றை மேய்ப்பவர்கள் வைத்துக் கொள்ளலாமாம். பழ நைவேத்தியம் செய்வதற்காக பழ வியாபாரிகளுக்கு தரப்பட்ட கடனிலிருந்து வட்டிப்பணத்தை எடுத்துக் கொள்ள ஆணை பிறப்பித்தான் ராசராசன்.

ஒரு சமுதாய நோக்கத்தோடு கோவிலுக்கான எல்லா தரப்பு மக்களின் பங்களிப்பையும் பெரிய கோவிலின் கல்வெட்டுக்களில் காண முடிகிறது என்கிறார் தங்கம் தென்னரசு. 1000 பேர் ஆடிய கின்னஸ் சாதனை நடனத்தை கல்வெட்டிலும் பொறிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார் நடனக்கலைஞர் பத்மா சுப்ரமணியம்.

அரசன் முதல் ஆண்டி வரை சோழர்களுக்கு ஒன்றுதான் என்கிறார்கள் இவர்கள். தனது விருப்பமில்லாமல் தனது குடும்பத்தை காப்பாற்ற தாசி தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண் கல்வெட்டில் தனது பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்றா கோரியிருப்பாள்? தொழில் அடிப்படையில் தனது வாரிசுகளும் சேவை சாதிகளாக மாறுவ‌தற்கு உதவும் கல்வெட்டில் தனது பெயர் இல்லை என்பதற்காக குப்பனும் சுப்பனும் அழுதா இருப்பார்கள்? இழிவை உயர்வாக திரித்து விட்டு வரலாறு இப்படித்தான் எழுதப்பட வேண்டும் என்பார்கள் போலும்.

மதங்களை அரசுக்கு மேலாக வைத்திருந்த சூழலில் அவற்றை சமமாக பாவித்தவன் ராசராசன் என்கிறார் கனிமொழி. ஆனால் ஈசான சிவ பண்டிதர் என்பவரை காசுமீரத்திலிருந்து கொண்டு வந்து தனக்கு ராஜகுருவாக நியமித்து கொண்டான் ராசராசன். இவரது வழிகாட்டலின் பேரில் சூத்திர சாதியில் இருந்து சத்ரிய சாதியாக தன்னை மேனிலையாக்கம் செய்துகொள்ள விரும்பிய ராசராசன் ரண்யகர்ப்ப யாகமும் செய்து பார்ப்பனர்களுக்கு பொன்னையும் பொருளையும் நிலங்களையும் மக்களின் வரிப்பணத்திலிருந்து வாரி வழங்கினான்.

ஒரு கலாச்சார படையெடுப்பையே தடுத்து நிறுத்தினான் ராசராசன் என்கிறார் அன்பழகன். ஆனால் பார்ப்பன கலாச்சாரத்தை தமிழகத்தில் புகுத்தியவனே ராசராசன்தான் என்கிறது வரலாறு. அன்று எழுந்த வந்த வணிக வர்க்கத்தின் வியாபார நடவடிக்கைகளுக்கு சுங்கம் விதித்து முட்டுகட்டை போட்டதும் இவனது ஆட்சியில்தான். இதனை இவனது பேரனான முதல் குலோத்துங்கன் வந்து விலக்கி சுங்கம் தவிர்த்த சோழனாக பெயர் பெற்றதும் வரலாறாகித்தான் உள்ளது.

வரிக்கொடுமை தாங்காமல் தங்களைத் தாங்களே கோவிலுக்கு அடிமையாக விற்றுக்கொள்ளும் 12 குடும்பங்களின் கதை செங்கற்பட்டு மாவட்ட கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. பார்ப்பனர்களுக்கு பொற்காலமாக விளங்கிய இக்காலத்தில் மன்னனுடைய மூத்த சகோதரன் ஆதித்த கரிகாலனை கொன்ற பார்ப்பனர்களை கூட மனுஸ்மிருதி யின் படி நாடுகடத்த மட்டுமே செய்தான் ராசராசன். கோவில் சொத்துக்களை இன்று போலவே அன்றும் பார்ப்பனர்கள் கையாடல் செய்ததை கல்வெட்டுக்களில் காணப்படும் தண்டனைகளின் வழியே அறிய‌ முடிகிறது.

கோவிலை மையமாக கொண்ட ஊரும் அதற்கு வெளியே சேரியையும் அமைத்த பெருமையும் சோழர்களுக்கே உண்டு.
குடவோலை முறையில் ஜனநாயகம் அன்று இருந்ததாக நீண்ட காலமாக வரலாற்று பாடப்புத்தகத்தில் சொல்லித் தருகிறார்கள். ஆனால் அந்த குடவோலையானது சொத்துள்ளவர்கள் மாத்திரமே இருக்கும் ஊர்சபையில் உள்ள பார்ப்பனர்களில் அவர்களது பிரதிநிதியை தெரிவுசெய்வதற்கு நடத்தப்படுவதே ஆகும் என்பதை சொல்லத் தவறுகிறார்கள். இப்போது நடக்கும் போலி ஜனநாயகத்திற்கான தேர்தலோடு தன்மையில், முடிவில் எல்லாம் ஒத்துப் போவதால் கருணாநிதி இதனை மக்களாட்சி என்று விளிப்பது ஒருவகையில் சரிதான்.

_______________________________________________
நன்றி வினவு
- வசந்தன்
_______________________________________________

அம்பேத்கர் ஏன் புத்த மதத்திற்கு மாறினார்?



அம்பேத்கர் ‘மஹர்‘ எனப்படும், சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு பிரிவில் பிறந்தார். ‘மஹர்‘ பிரிவு மக்களுக்குச் சிறந்தபோர்க்குணங்கள் உண்டு. ஆனால், கல்வியறிவு கிடையாது. அதன் காரணமாகவேஅவர்களால் சமுதாயத்தில் சிறந்த அந்தஸ்து பெற முடியாமல் இருந்தது.

ஒரு தனிமனிதனின் குணங்கள் அவன் வளர்க்கப்படும் சூழ்நிலையிலும், அவனதுஉணவையும் பொறுத்தே இருக்கிறது என்பதையும் அம்பேத்கர் அறிவார்.

புலால்உணவை மறுப்பது ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று அவர்ஆராய்ந்தார். ‘பஞ்சமா பாதகங்களைச் செய்யாதே‘ என்று உபதேசித்தால், மக்கள்கேட்டுவிடப் போகிறார்களா என்ன? மாறாக அதைச் சொல்லாமல் அந்த நிலைக்குஅவர்களை இயற்கையாகவே இட்டுச் செல்ல வேண்டும். பஞ்சமா பாதகங்களைப்பற்றிக் கவலைப்படாதவை கிறிஸ்தவம், இசுலாம். அப்படியானால் அவர்களை நல்லநிலைக்கு இட்டுச் செல்ல புத்தமதத்தால்தான் இயலும்.

புத்த மதத்தில் சேர்ந்த பின்பு அதன் கொள்கைகளை நெறிப்படிக் கடைப்பிடிக்கவைப்பதன் மூலம் அவர்களை நல்ல நிலைக்கு முன்னேற்றி, சிந்தித்துச் செயல்படும்திறன் உள்ளவர்களாக மாற்றி, சமுதாயத்தில் சம அந்தஸ்து உடையவர்களாகஅவர்களை ஆக்கிவிட முடியும் என்று அவர் நம்பியதாலே இலட்சக்கணக்கானதொண்டர்களுடன் அவர் புத்த மதத்திற்கு மாறினார்.

அரசியலமைப்புச் சட்டத்தின்தந்தை என்று அழைக்கப்படும் அம்பேத்கருக்கு சட்ட அமைப்பு 25-ன் விதிப்படிபுத்தமதம் ஹிந்து மதத்துடனே ஒன்றாகவே கருதப்படுகிறது என்பது எப்படிநினைவற்றுப் போகும்? சட்டத்தைத் தொகுத்தது அவரல்லவா? எனவே அம்பேத்கர்புத்த மதத்திற்கு மாறியதற்கு அதுவே காரணம்.”

- ‘மதமாற்றத் தடைச் சட்டம் ஏன்‘
இந்து முன்னணி வெளியீடு, பக்கம் 32.

”தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியறிவற்ற மூடர்களாக, அசுத்தமான வாழ்க்கையை வாழ்ந்தனர்; இறைச்சி உண்ணும் பழக்கங்கொண்ட அவர்கள் பொய், திருட்டு, பெண்டாளுதல் போன்ற பஞ்சமா பாதகங்கள் செய்யும் போக்கிரிகளாகவும் இருந்தனர்; இவற்றிலிருந்து அவர்களைத் திருத்த நினைத்த அம்பேத்கர் இசுலாம், கிறித்தவம் போன்ற அநாகரீக மதங்களைத் தவிர்த்துவிட்டு இந்து மதத்தின் உட்பிரிவான புத்த மதத்திற்குத் தனது ஆதரவாளர்களோடு மதம் மாறினார்” என்பதே இதன் பொருள்.

தாழ்த்தப்பட்ட மக்கள் அநாகரீகமானவர்கள், போக்கிரிகள் என்பது பார்ப்பன ‘மேல்’ சாதியினர் இன்று வரையிலும் கொண்டுள்ள வெறுப்புக் கலந்த திமிரான கருத்தாகும். இதற்காகத்தான் அம்மக்களோடு அம்பேத்கர் மதம் மாறினார் என்பது வெறும் பொய்யல்ல; பார்ப்பனக் கொழுப்பும் நரித்தனமும் கலந்த பொய்.

காரணம், அவர்கள் பார்ப்பன இந்து மதத்தால் தண்டிக்கப்பட்ட வரலாற்று அடிமைகள். அவர்கள் அடிமைகள் என்று உணர்வதைக் கூட அனுமதிக்காத பார்ப்பன இந்துமதம்தான் அநாகரீகமானது என்றார் அம்பேத்கர்.

ஒரு மதம் என்பது பொதுவாக மானுடத்தின் அறவியல், மகிழ்ச்சி, விடுதலையைப் பேசுகின்ற கொள்கைகளைக் கொண்டிருக்கும். ஆனால், இந்து மதம் என்பது கொள்கைகளின் தொகுப்பா அல்லது தண்டனைகளைப் பட்டியலிடும் குற்றவியல் சட்ட விதிகளின் தொகுப்பா? சாதிப்படி நிலையில் சூத்திர – பஞ்சம மக்கள் எப்படி அடங்கி ஒடுங்கி வாழவேண்டும் என்பதையே விதிகளாய் வைத்திருக்கும் பார்ப்பனியத்தை ஒரு மதம் என்று அழைக்கமாட்டேன் என்றார் அம்பேத்கர்.

சமூக நீதிகளைப் பொறுத்தவரை மனு தர்மத்தின் சட்டங்களை விடக் கேவலமான சட்டங்கள் எதுவுமில்லை என்று இந்து மதத்தின் மனித விரோதத் தன்மையைக் கிழித்துக் காட்டினார்.

‘இந்து’ என்ற பெயரே முகமதியர்கள் இட்ட பெயர்தான். அவர்கள் அப்படிப் பெயரிடவில்லை என்றாலும் பிரச்சினை ஏதும் வரப்போவதில்லை. காரணம் நாமெல்லாம் ஒரு நாட்டு மக்கள் என்ற சகோதர சமூக சிந்தனை பார்ப்பனியத்தின் சாதிய சமூகத்தில் இல்லாதபோது ஒரு பொதுவான பெயர் பற்றிய கேள்வியே எழுவதில்லை.

இந்து – முசுலீம் சண்டையை தவிர்த்துப் பார்த்தால் இங்கே தனித்தனிச் சாதியாக வாழ்வதே முதலும் முடிவுமான குறிக்கோளாக இருக்கிறது. மக்கள் தங்களுக்குள் கலந்து உறவாடுவதாலேயே சமூகமாக வாழ்கின்றனர். ஆனால், இங்கே பிரிந்து வாழ்வதையே சட்டமாக வைத்திருக்கும் ஒரு நாட்டில் சமூகம் எங்கே இருக்கிறது என்று சீறியவர் அம்பேத்கர்.

சாதிய அமைப்பு என்பது தொழில்களை மட்டுமல்ல, தொழிலாளர்களையும் ஏற்றத்தாழ்வாக செயற்கையான தனித்தனித் தீவுகளாய்ப் பிரித்து விடுகிறது. பரம்பரை பரம்பரையாய் குலத்தொழில் செய்து வரும் ஒருவன் தன் தொழிலின் நலிவால் வாழ இயலாத போதும் பட்டினி கிடந்து சாவானே ஒழிய வேறு தொழில் செய்ய மாட்டான். அப்படிச் செய்வதை நினைத்தும் பார்க்க முடியாத வாழ்வைத்தான் பார்ப்பன இந்து மதம் விதித்திருக்கிறது என்று வழக்காடினார் அம்பேத்கர்.

இப்படி வாழ்வையும் சிந்தனையையும் மட்டுமல்ல உடற்கூற்றையும் பார்ப்பன இந்துமதத்தின் சாதியம் தனது மீற முடியாத அகமண முறையால் எப்படி நலிவடைய வைத்திருக்கிறது என்றால், இந்திய மக்களில் 100-க்கு 90 பேர் ராணுவத்துக்கு (உடல், எடை, உயரம்) இலாயக்கில்லாதவர்களாக உருவாக்கியிருக்கிறது என்று கேலி செய்தார் அம்பேத்கர். அது மட்டுமா, ஒவ்வொரு சாதிக்கும் விதிக்கப்பட்ட தனித்தனி உடை, உணவுப் பழக்கங்கள் காரணமாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வேடிக்கைப் பொருளாக, அருங்காட்சியகமாக இந்தியா இருப்பதை சினத்துடன் எடுத்துக் காட்டினர் அம்பேத்கர்.

கழுத்தில் கலயத்தையும், இடுப்பில் துடைப்பத்தையும் கட்டி தாழ்த்தப்பட்ட மக்களை வீட்டு நாயைவிடக் கேவலமாக நடத்திய இந்துக்கள் தங்களைப் பற்றியும், அதேபோல தம் அருகே வாழும 130 லட்சம பழங்குடியினர் (அம்பேத்கர் காலத்தில்) எந்த நாகரீக வளர்ச்சியுமின்றி ‘குற்றப் பரம்பரையாக’ நீடிப்பது பற்றியும் வெட்கமோ, வேதனையோ அடைவதில்லை என்று காறி உமிழ்ந்தார் அம்பேத்கர்.

இம்மக்களுக்கு கிறித்தவ மிஷனரிகள் செய்யும் சேவையைப் போல் இந்துக்கள் ஒருக்காலும் செய்ய முடியாது என்றும், அத்தகைய சகோதரத்துவ எண்ணமே பார்ப்பனியத்தின் ஆன்மாவில் கிடையாது என்பதையும் விளக்கினார்.

ஆரிய சமாஜத்தின் ‘தாய் மதம்’ திருப்பும் மதமாற்றச் சடங்கை ஒரு மோசடி என நிரூபித்தவர் அம்பேத்கர். ஏனைய மக்கள் ‘தம் கொள்கையால் மட்டுமே விடுதலை பெற முடியும்’ என்று தம் எண்ணிக்கையைப் பெருக்குவதற்கான அடிப்படையைக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்து மதமோ அத்தகைய வாக்குறுதியைக் கொடுக்க முடியாததோடு, அப்படி ஒரு முயற்சியையும் செய்ய முடியாது.

காரணம் இந்து மதத்தில் சேர்க்கப்படும் ஒரு புதியவரை எந்தச் சாதியில் வைப்பது என்ற பிரச்சினை உள்ளது. சாதித் தூய்மையில் இரத்தக் கலப்பை விரும்பாத இந்துச் சமூகம் நெடுங்காலமாய் மதப் பிரச்சாரம் மற்றும் மதமாற்றம் செய்யாததற்கும் இதுவே காரணம் என்றார் அம்பேத்கர்.

”நாங்கள் சாதியை ஏற்கவில்லை, அவை இந்து மதத்தில் நுழைந்த இடைச் செருகல்கள், தொழில்முறை வேலைப் பிரிவினைக்காக ஏற்பட்ட வருண அமைப்பே இந்து மதத்தில் ஏற்படுத்தப்பட்டது” என வருண அமைப்புக்கு ஆதரவாக ஆரிய சமாஜத்தினர் வழக்காடினார்கள்.

அப்படி என்றால் ஒவ்வொரு தொழிலுக்கும் பிராமணன், சத்ரியன், வைசியன் என்று முத்திரை குத்துவது ஏன், பிறப்பின் அடிப்படையில் மட்டும் தொழில் தீர்மானிக்கப்படுவது ஏன், தொழில் மாறும் உரிமை கொடுக்க மறுப்பது ஏன், அப்படி மாறினால் கடும் தண்டனை வழங்கும் காப்பாளராக இந்து மதம் இருப்பது ஏன் என்று கேட்ட அம்பேத்கர், நான்கு வருணங்கள் - நான்காயிரம் சாதிகள் எனப் பிரிந்திக்கிறதே ஒழிய தன்மையில் ஒன்றுதான் என்று அம்பலப்படுத்தினார்.

மேலை நாடுகளைப் போல இந்தியாவில் ஒரு சமூகப் புரட்சி ஏன் நடக்கவில்லை? ஐரோப்பாவில் உள்ள ஒரு தொழிலாளி இராணுவத்தில் சேரும் உரிமையிலிருந்து தனது பௌதீக ஆயுதத்தையும், போராடும் உரிமையிலிருந்து தனது அரசியல் ஆயுதத்தையும் கல்வி கற்கும் உரிமையிலிருந்து தனது தார்மீக ஆயுதத்தையும் பெற்றிருந்தான்.

அதனால் அங்கே புரட்சிகள் நடந்தன. இங்கே பெரும்பான்மை மக்களுக்குக் கல்வி கற்கும் உரிமையும், போராடும் உரிமையும், ஆயுதம் ஏந்தும் உரிமை கிடையாது. தனது கலப்பையோடு பிறந்து மாடு போல உழைத்துச் சாவதற்கு மட்டுமே உரிமை கொண்ட ஒரு சூத்திர – பஞ்சமன் தனது கலப்பைக் கொழுவை ஒருவாளாக மாற்ற அனுமதியில்லை. அதனால்தான் பல்வேறு கொடுமைகளைச் சகித்துக் கொண்டு வாழ்ந்த உழைக்கும் மக்களிடமிருந்து எந்தப் புரட்சியும் தோன்றவில்லை. தோன்றவும் முடியாது என்றார் அம்பேத்கர்.

இத்தகைய சாதிய அமைப்பை ஒழிக்காமல் ஒரு தேசத்தை உங்களால் உருவாக்க முடியாது,
வெள்ளையர்களை விரட்டினாலும் தமது அடிமைத்தனத்திலிருந்து மக்கள் விடுதலை அடைய முடியாது என்றார் அம்பேத்கர்.

”தீண்டாமைப் பிரச்சினையையும் – மத மாற்றத்தையும் – இந்து மதத்திற்குள்ளேயே பேசித் தீர்த்து விடலாம் – அதை அரசியல் அரங்கிற்குக் கொண்டு வராதீர்கள்” என காந்தி ஒவ்வொரு முறையும் நயவஞ்சமாக நாடகமாடினார்.

பேசுவதற்கு முன்னால் உங்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெள்ளைக் குல்லாய் போட வேண்டும், கதராடை உடுத்த வேண்டும், என்று வைத்திருப்பதுபோல சாதி, தீண்டாமை பாராட்டுபவன் உறுப்பினராக முடியாது என்று விதி கொண்டு வர முடியுமா என காந்தியின் கழுத்தைப் பிடித்துக் கேட்டார் அம்பேத்கர்.

ஆங்கிலேயரின் கைக்கூலி, தேசத் துரோகி என்று காங்கிரசு கும்பலும், பத்திரிகைகளும் வசை பாடிய போதும் தனது போராட்டத்தை விட மறுத்தார் அம்பேத்கர்.
1927-ஆம் ஆண்டு மராட்டியத்தில் சவுதாகர் களப் போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தீண்டாமைக் கொடுமைக்கெதிரான நீரெடுக்கும் போராட்டத்தினைத் துவக்கினார் அம்பேத்கர்.

அடுத்த நாளே ‘இந்துக்கள்’ 108 பானைகளில் சாணம், பசு மூத்திரம், பால், தயிர் கொட்டி பார்ப்பனர்களின் யாகத்தோடு குளத்திற்குத் தீட்டு கழித்தார்கள். 1930-ஆம் ஆண்டு அம்பேத்கரும் தாழ்த்தப்பட்ட மக்களும் துவக்கிய நாசிக் கோவில் நுழைவுப் போராட்டம் 1935-ஆம் ஆண்டில்தான் வெற்றியடைந்தது.

அம்பேத்கரின் இத்தகைய போராட்டங்கள் வன்முறையற்ற அமைதியான போராட்டங்கள்தான் என்றாலும் இந்துக்கள் பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்தார்கள், தாக்கவும் செய்தார்கள். இதனால் இந்த நாட்டில் சாதி – தீண்டாமையை ஒழித்து ஒரு சமூக எழுச்சியைக் கொண்டு வரும் தனது முயற்சியில் இந்துக்களைத் திருத்த முடியவில்லையே என்று வேதனைப்பட்ட அம்பேத்கர் 1935 யேவா மாநாட்டில் ”நான் பிறப்பால் இந்துவாகப் பிறந்து விட்டேன். ஆனால், நிச்சயம் இந்துவாகச் சாகமாட்டேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன்” என்று முடிவெடுத்தார்.

இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன் 1956-ஆம் ஆண்டு 2 லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களோடு புத்த மதம் மாறினார்.

2 லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களோடு பௌத்தத்திற்கு மதம் மாறிய அத்பேத்கர் புத்த மதம் மாறியதன் காரணம் என்ன?

பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மைக்கு எதிராகவும், விகாரமான சடங்குகளுக்கு எதிராகவும், 25 நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றியது புத்த மதம். இந்து மதவெறியர்கள் கூறுவதுபோல பௌத்தம் இந்து மதத்தின் உட்பிரிவு அல்ல. ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கோல்வால்கரே, புத்த மதம் செல்வாக்குடன் இருந்த வடமேற்கு – வடகிழக்குப் பகுதிகளில் வருண – சாதிய அமைப்பு சீர் குலைந்ததாகவும், அதனாலேயே முசுலீம், கிறித்தவ மதமாற்றமும் படையெடுப்பும் நடந்ததாகக் கூறி பௌத்தத்தை அருவெறுப்புடன் பார்க்கிறார்.

கணிசமான காலம் பார்ப்பனியத்திற்கு மாற்றாக விளங்கிய புத்தமதம் செல்வாக்குடன் திகழ்ந்ததற்கு அசோகர் உள்ளிட்ட மௌரிய மன்னர்கள் அளித்த ஆதரவும் முக்கியக் காரணமாகும்.
கடவுள், சடங்கு, நிரந்தர உலகக் கொள்கையை நிராகரித்த புத்தர், அனுபவ ஆய்வையும் – அறிவையும் மட்டுமே நம்ப வேண்டுமென்றார். மேலும் அகத்தூய்மை, போதுமென்ற மனம், ஆசையை விட்டொழித்தல், பற்றுக்களை உதறுதல் ஆகியவற்றின் மூலமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றார்.

அவர் அமைத்த பிக்குகள், பிக்குணிகள் அடங்கிய சங்கம் எளிமைக்கும், சகோதரத்துவத்திற்கும், சமூக அக்கறைக்கும் சான்றாக விளங்கியது. இப்படி பார்ப்பனியத்திற்கு எதிராகக் கிளம்பிய பௌத்தம் பல்வேறு வரலாற்றுக் காரணங்களால் தோல்வியைத் தழுவி, இந்தியாவிலிருந்தே விரட்டப்பட்டது.

புத்தரின் பார்ப்பனிய எதிர்ப்பும், சமூக நோக்கமும் அம்பேத்கருக்கு மிகவும் பிடித்திருந்தன. மேலும் மனிதனின் அறவியல் விழுமியங்கள் தோன்றி நீடிப்பதற்கு மதம் அவசியம் என்பதும் அவரது கருத்தாக இருந்தது. அவரைப் பொறுத்தவரை ஒரு நல்ல சமூகம் நிலவ வேண்டுமானால் சமூக நீதிகளைக் கொண்ட சட்டத்தை வைத்து மக்களை ஆளும் ஒரு நல்ல அரசு புறநிலையாகவும், மனிதனின் ஆன்மீக மேன்மையை வளர்க்கும் ஒரு மதம் அகநிலையாகவும் தேவை எனக் கருதினார்.

அதேசமயம் 25 நூற்றாண்டுகளுக்கு முந்தைய புத்த மதம் அந்தக் காலத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயன்ற ஒரு மதமே தவிர இன்றைய பிரச்சினைகளுக்கு அது தீர்வாகாது. அதாவது புத்தரின் ‘நிர்வாணநிலை’ தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் போராடும் தேவையை மறுத்து, போதுமென்ற மனநிலையை அளிக்கிறது. இவையெல்லாம் அம்பேத்கருக்குத் தெரியாதா, என்ற கேள்விக்கு அவரது கடைசிக் காலத் தோல்விகளும், மதம் பற்றிய அவரது கருத்தும், சாதி ஒழிப்பிற்கான வழி முறை பற்றிய அவரது சித்தாந்தமும் பதிலாகின்றன.

அடுத்து முசுலீம் – கிறித்தவ மதங்களுக்க அவர் ஏன் மதம் மாறவில்லை? இந்து மதவெறியர் கூறுவது போல அவை ‘அநாகரீகமான மதங்கள்’ என்பதால் அல்ல. முதலில் அவை பார்ப்பனியத்தை எதிர்த்துப் பிறந்த மதங்கள் அல்ல; இரண்டாவது, இந்த மதங்களும் பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பை ஓரளவிற்கு ஏற்றபிறகே இந்தியாவில் நிலைபெற ஆரம்பித்தன.

மேலும் இசுலாமும், கிறித்தவமும் தமது மதக் கொள்கைகளைவிட வலுவான நிறுவன ரீதியான வலைப்பின்னலாலும், அரசு போன்ற கண்காணிப்பு செய்யும் சமூக நெறிப்படுத்தலாலும்தான் நீடிக்கிறது என்பது அவருக்குப் பிடிக்கவில்லை. பௌத்தம் மட்டுமே தனிமனிதனிடம் அறவியல் நல்லொழுக்கங்களை சுதந்திரமான முறையில் வளர்த்தெடுக்கின்றது என்பது அவர் கருத்து. ஆனால், இன்றும் புத்த சமயம் செல்வாக்குடன் வாழும் நாடுகளில் கூட அது நிறுவன ரீதியான மதமாகத்தான் இருக்கின்றது. மேலும் அம்பேத்கரின் புத்தமத மாற்றம் என்பது பார்ப்பன இந்து மதத்தை அசைத்துப் பார்க்கும் அளவு வெற்றியடையவில்லை.

இன்றைய தேவை கருதி அம்பேத்கரைத் திரித்துப் புரட்டும் இந்து மதவெறியர்கள் இன்று வரையிலும் அவரை வன்மத்துடன்தான் பார்க்கிறார்கள். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கோரும் அவரது மசோதாவை ஆத்திரம கொண்டு எதிர்த்தனர், கலவரம் செய்தனர்.

சில வருடங்களுக்கு முன் ‘இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்’ என்ற அவரது நூலைத் தடை செய்யக் கோரியும், மராத்வாடா பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டியதை எதிர்த்தும், ஆர்.எஸ்.எஸ். சிவசேனைக் கும்பல் வெறியாட்டம் நடத்தியது; பல தாழ்த்தப்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்; பல சேரிப்பகுதிகள் தீக்கிரையாகின; அம்பேத்கர் கைப்படச் சேகரித்த நூலகம் ஒன்றும் எரித்து அழிக்கப்பட்டது. அதன்பின் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்ததைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய தாழ்த்தப்பட்ட மக்களில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டு வங்கியைக் கவரவும், தனது ‘மேல்சாதி’த் தன்மையை மறைக்கவம் அம்பேத்கரைப் புகழ்பாடும் இந்து மத வெறியர்கள் அப்போதுகூட, ‘ஆம் எங்கள் மதத்தின் அழுக்குகளை அநாகரீகங்களைக் களைய முயன்றார் அம்பேத்கர்’ என்று கூறாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் சுத்தமாக வாழ்வதற்கு முயன்றார் என்று கூசாமல் கூறுகின்றனர்.

கன்சிராம், மாயாவதி, ராம்விலாஸ் பஸ்வான், திருமாவளவன், கிருஷ்ணசாமி இவர்களையெல்லாம் வென்றெடுத்துவிட்ட நிலையில் இந்து மத வெறியர்கள் இன்னும் ஒருபடி மேலேபோய் அம்பேத்கர் இந்துமத மகான்களில் ஒருவர் என்று கூடக் கூறமுடியும்.
அரசியல் சட்டத்தின் 25வது பிரிவில் முசுலீம், கிறித்தவர்கள் தவிர்த்த புத்த மதத்தினர், ஜைனர்கள், சீக்கியர்கள் ஆகியோர் இந்துக்கள் என்று கூறப்பட்டிருப்பது உண்மைதான்.

தான் எதிர்த்த காங்கிரசின் மந்திரி சபையில், அம்பேத்கர் சட்ட மந்திரியாக இருந்தது, அரசியல் சட்ட முன் வரைவுக் குழுத் தலைவராகப் பணியாற்றியது – இவையெல்லாம் அரசு என்ற நிறுவனத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் குறைந்தபட்ச உத்திரவாதமும், சலுகைகளும் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காகத்தான். இவை சாதி ஒழிப்பின் சிக்கல்கள் நிறைந்த பாதை அம்பேத்கரிடம் ஏற்படுத்திய சமரசங்கள். அதேசமயம் இத்தகைய முயற்சிகளால் அவர் திருப்தியடையவில்லை; அவை தவறு என உணர்ந்தபோது தூக்கி எறியவும் செய்தார்.

”என் விருப்பத்திற்கெதிராக எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்யுமாறு பணிக்கப்பட்டேன், அரசியல் சட்டம் எழுத அவர்களுக்குக் கிடைத்த ஒரு சவாரிக் குதிரைதான் நான்” என்று கூறிய அம்பேத்கர் பின்னாளில் ”அரசியல் சட்டத்தை எழுதிய நானே அதை எரிப்பதிலும் முதல் நபராய் இருப்பேன்” என்றார்.

இந்துப் பெண்களுக்கான சமச் சொத்துரிமை தொடர்பான மசோதாவைத் திருத்தவும், தள்ளி வைக்கவும் முயன்ற நேரு அரசாங்கத்திற்கு எதிராக தன் சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார் அம்பேத்கர். இவை சமரசத்தின் மூலம் அம்பேத்கர் முடங்க மாட்டார் என்பதைக் காட்டுகின்றன.

சமீபத்தில் சீக்கிய மதம் இந்து மதத்தின் உட்பிரிவதான் என்ற கூறிய ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக சீக்கியர்கள் போராடினார்கள். அதனால் ஆர்.எஸ்.எஸ் தலைமை சீக்கிய மதம் தனியான மதம்தான் என்று மன்னிப்பு கேட்டு ஒப்புக் கொண்டது. ஆனால், தலித் பிழைப்புவாதிகள் பாரதீய ஜனதா கட்சியில் சங்கமமாயிருக்கும் இக்காலத்தில் பௌத்தத்தையும் அம்பேத்கரையும் இந்துமத வெறியர்கள் மற்றும் தலித் பிழைப்புவாதிகளிடமிருந்து மீட்டெடுக்கும் கடமை சாதிய ஒழிப்பில் அக்கறை கொண்ட ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

   நன்றி வினவு
("வினவு " இல் இருந்து)

முதலாளித்துவம்,பார்ப்பனியம்

பார்ப்பனீயம் குறித்தும் முதலாளித்துவம் குறித்தும் பல கட்டுரைகள்வெளியிடுகிறீர்கள். ஒன்று மற்றதன் தயவில் நிலைத்திருப்பது குறித்த கருத்தையும் இங்குதான் தெரிந்து கொண்டேன் ஆனால் இதுவரை எந்த கட்டுரையும் தெளிவாக விளக்கவில்லை. இரண்டும் சந்திக்கும் புள்ளிகள், சேர்ந்தியங்கும் முறை குறித்து ஒரு நடைமுறை உதாரணம் கொடுக்க முடியுமா? முடிந்தால் ஒரு கட்டுரை வெளியிடுங்களேன்.


இந்தக் கேள்விக்கான பதிலை பொதுவான வாசகரும் புரிந்து கொள்ளும் பொருட்டு சற்று எளிமையாகவும் விரிவாகவும் எழுதுகிறோம்.
பார்ப்பனியம், முதலாளித்துவம் இரண்டும் இரு வேறுபட்ட சமூக அமைப்பு முறைகள். முதலாவது நிலத்தையும், விவசாயத்தையும், நாட்டுப்புறத்தையும், அதற்கு பொருத்தமான ‘மத’த்தையும் அடிப்படையாகக் கொண்ட நிலவுடமைச் சமூகம். இரண்டாவது பெருந்தொழில்கள், பெருநகரங்களை அடிப்படையாகக் கொண்ட நவீன சமூகம்.

பார்ப்பனியம் இந்தியாவின் விசேடமான நிலவுடமைச் சமூக அமைப்பு முறை. மற்ற நாடுகளில் உள்ள நிலவுடமைச் சமூக அமைப்புகளோடு இதற்கு பல பொதுத்தன்மைகள் இருந்தாலும் சாதி என்ற தனித்தன்மை இந்தியாவில் மட்டுமே உண்டு. எனினும் இந்த தனித்தன்மை என்பது நிலவுடமை பொருளாதார அமைப்பு என்ற அடிப்படையிலேயே செயல்படுகிறது. வெறும் கருத்து, சிந்தனை சார்ந்த அமைப்பல்ல.

சிலர் பார்ப்பனியத்தை வெறும் கருத்தியல் சார்ந்த அமைப்பாகவே பார்க்கின்றனர். அது தவறானது.

1789-இல் நடந்த பிரான்சில் நடந்த பிரெஞ்சுப் புரட்சிதான் முதன்முறையாக நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை புரட்சி மூலம் அழித்துவிட்டு முதலாளித்துவ சமூக அமைப்பிற்கான விதையை விதைக்கிறது. கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரம் பறிக்கப்பட்டு, நிலங்கள் மீட்கப்பட்டு, கல்வி – சட்டம் இரண்டிலும் மதம் நீக்கப்படுகிறது.

கத்தோலிக்க மதம் என்பது இங்கு பார்ப்பனியம் போன்று ஐரோப்பாவில் இருந்த மத ஆதிக்க நிறுவனம். இது மதத்தோடு மட்டுமல்லாமல் அரசு, சொத்து, சட்டம் அனைத்திலும் அதிகாரம் கொண்டிருந்தது.
பிரெஞ்சுப் புரட்சியில் பங்கேற்ற உழைக்கும் வர்க்கத்தினரின் வன்முறையை பார்த்து அச்சமுற்ற இங்கிலாந்து நாட்டில், நிலவுடமைச் சமூகம் புரட்சி மூலம் அழிக்கப்படவில்லை. வன்முறையற்ற சீர்திருத்தங்கள் மூலமே முதலாளித்துவம் கொண்டு வரப்படுகிறது. அப்படித்தான் படிப்படியாக அரசரின் அதிகாரம் குறைக்கப்பட்டு, முதலாளிகளின் பாராளுமன்ற ஜனநாயகம் கொண்டுவரப்படுகிறது.

இந்த மாற்றத்தை பல ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் முதலாளிகளும் பின்பற்றுகின்றனர். சாதாரண மக்களது எழுச்சியைக் கண்டு பயம் கொண்ட அவர்கள், முழுமையாக நிலவுடமை சமூகத்தின் மதம், பண்பாடுகளை விட விரும்பவில்லை. தொழிலாளிகள் அரசியல் எழுச்சி கொள்ளாது இருக்க மதம் அவர்களுக்கு தேவைப்பட்டது.

இப்படித்தான் முதலாளித்துவ வர்க்கம் நிலவுடமைச் சமூகத்தை முற்றிலும் அழிக்காமல் அல்லது பண்பாட்டு துறையில் மட்டும் தேவையான அளவுக்கு விட்டு வைத்தது.

1917-இல் தொழிலாளிகள் தலைமையில் ரசியப் புரட்சி நடக்கிறது. முதலாளித்துவ சமூக அமைப்பை தூக்கி எறிந்து விட்டு சோசலிச அமைப்பிற்கான அடிப்படை உருவாக்கப்படுகிறது.

இதைக் கண்டு அஞ்சிய முதலாளிகளும், ஏகாதிபத்தியங்களும் அதன் பிறகு உலகம் முழுவதுமிருந்த குறிப்பாக மூன்றாம் உலகநாடுகளில் இருந்த நிலவுடமை சமூக அமைப்பை தகர்க்காமல், அதனுடன் கூட்டு சேர்ந்து கொண்டு காலனிய நாடுகளில் சுரண்டி வந்தனர். இப்படித்தான் பார்ப்பனியமும் ஆங்கிலேயர்களின் ஆசிர்வாதத்தோடு இந்தியாவில் தனது ஆதிக்கத்தை தக்க வைத்தது.

ஆங்கிலேயர் காலத்தில் பார்ப்பன இந்து மதத்தில் சில சீர்திருத்தங்களை கொண்டு வரப்பட்டாலும் அதன் அடிப்படையான சாதிய சமூகத்தை அப்படியே விட்டு வைத்தார்கள். பிரிட்டனுக்கு முன் சாதிய அமைப்பின் மீதான சுரண்டல் மன்னர்களுக்கும், ‘மேல்’ சாதியினருக்கும் சென்றது. இங்கிலாந்து வந்தபின்னர் அது கைமாறுகிறது.

பார்ப்பனிய சாதிய அமைப்பின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் அரசு, அரசாங்கம், காங்கிரசு, ஜமீன்தார்கள், என அதிகாரத்தை சுவைத்த போது கீழ்மட்டத்தில் உள்ள உழைக்கும் சாதிகள் உடலுழைப்பு கொண்ட வேலைகளுக்கு பயன்பட்டனர். மேலும் இலட்சக்கணக்கில் வெளிநாடுகளில் உள்ள ஆங்கிலேயர்களின் தோட்டத்திற்கும் அனுப்பப்பட்டனர்.

இப்படித்தான் இந்தியாவில் காலனிய ஆட்சி தங்கு தடையின்றி நடந்தது.
சூத்திர, பஞ்சம சாதிகளைச் சேர்ந்தோர் பார்ப்பன சாதியமைப்பில் கீழ்நிலையில் உள்ளவர்கள். கிராமங்களில் ஒதுக்கப்பட்ட இடங்களில் வாழ்ந்து கொண்டு விதிக்கப்பட்ட வேலைகளை செய்து கொண்டு, தரப்பட்ட பொருளைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுபவர்கள்.

மற்றபடி இவர்கள் யாரும் படித்து, வியாபாரம் செய்து, வேறு தொழில் செய்தெல்லாம் ஆளாவது என்பது கனவில் கூட நடவாது. அந்த வகையில் இந்த உழைப்பு ரிசர்வ் சக்திகள், காலனிய ஆட்சியின் போது நடைபெற்ற இரயில்வே, தோட்டங்கள், ஆலைகள், இராணுவ சிப்பாய் என்று அடிக்கட்டுமான வேலைக்கு மலிவான கூலிக்கு கிடைத்தார்கள்.


சாராமாகச் சொன்னால் ‘மேல்’ சாதியினர் நீதிபதிகள், வக்கீல்கள், தொழிலதிபர்கள், தலைமை நிர்வாகிகள் என்றும், இடைத்தர சாதியினர் குமாஸ்தாக்களாகவும், போலீசாகவும், சிறு வியாபாரம் என்றும், அடித்தட்டு சாதியினர் உடலுழைப்பு வேலைகளுக்காகவும் பயன்பட்டனர். இத்தகைய அருமையான சுரண்டல் அமைப்பை வழங்கிய பார்ப்பனியத்தை வெள்ளையர்கள் ஏன் அழிக்க வேண்டும்? ஆகவே அதை திட்டமிட்டு பாதுகாத்தார்கள்.


சரி வெள்ளையர்கள் சென்ற பிறகும், இந்த நிலைமை இன்னும் மாறிவிடவில்லை. கடந்த 50 ஆண்டுகளாக சில சீர்திருத்தங்கள் மூலம் சில பல ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் மேல்மட்ட வேலைகளுக்கு வந்தாலும், பெரும்பான்மையான மக்கள் பழைய பார்ப்பனிய நிலவுடமை சாதிய அமைப்பின் படிதான் வாழ்கின்றனர். அதாவது அவர்களுக்கு நிலம் சொந்தமில்லை, கூலி வேலை செய்துதான் வாழ முடியும், படிப்பு, தொழில் என்று வேறு வாய்ப்புகள் இப்போதும் சாத்தியமில்லை என்றுதான் வாழ்கின்றனர்.


பார்ப்பனியம் மனிதரில் ஏற்றத்தாழ்வு வைத்து பிரிப்பதைப் போல முதலாளித்துவம் சந்தை, இலாபத்தை வைத்து நாட்டில் ஏற்றத் தாழ்வை கொண்டு வருகிறது. அதாவது தொழில் வாய்ப்பு, திறமையான உழைப்பாளிகள், போக்கு வரத்து வசதிகள், துறைமுகம், தடையற்ற மின்சாரம், சந்தைக்கு அருகாமை என்று தங்களது தொழிலுக்கு சாதகமான இடங்களை மட்டுமே குறி வைப்பார்கள்.

அந்த வகையில் வடக்கு தமிழகம், குஜராத், மேற்கு மராட்டியம், கடற்கைரையோர ஒரிசா, ஆந்திராவின் சில பகுதிகள், கர்நாடகாவின் சில பகுதிகள், ஹரியாணா என்று இந்தப் பகுதிகளை மட்டும் தரகு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. அரசும் இத்தகைய இடங்களை மட்டும் செல்வு செய்து வளரச் செய்கிறது.
ஆனால் இத்தகைய வசதிகள் அற்ற ராஜஸ்தான், உத்திரபிரதேசம், பீகார், ஒரிசா, மத்தியப்பிரதேசம், போன்ற மாநிலங்கள் எல்லா அளவுகோல்கள் படியும் மிகவும் கீழ்மட்ட வாழ்வில் உள்ளன.

முக்கியமாக இந்த மாநிலங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் உள்ளூரில் உள்ள பார்ப்பனிய நிலவுடைமை அமைப்பு முறையால் குறைந்த பட்ச வாழ்க்கையைக் கூட வாழமுடியாமல் தத்தளிக்கிறார்கள். அந்த வகையில் இவர்கள்தான் இந்தியாவில் மாபெரும் ரிசர்வ் பட்டாளமாக இருக்கின்றனர்.


தற்போது இந்தியாவில் உள்ள எல்லா நிறுவனங்களிலும் பகுதி நேர தொழிலாளிகளாக இவர்களே கடுமையாக சுரண்டப்படுகின்றனர். இன்று தமிழகம் முழுவதிலுமுள்ள சிறு, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகள் அனைத்திலும் இந்த வடமாநிலத் தொழிலாளர்களை பார்க்கலாம். இவர்களில் யாரும் பார்ப்பன ‘மேல்’ சாதியைச் சேர்ந்தோர் கிடையாது என்பதை விளக்கத் தேவையில்லை.


தமிழகத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். கிராமங்கள், நகரங்களில் உள்ள அக்ரகாரத்தை சேர்ந்த பார்பனர்களும், மேலத்தெருவைச் சேர்ந்த நாயுடு, ரெட்டி, செட்டியார், சைவ வேளாளர் முதலானோர் சென்னை, டெல்லி, லண்டன், அமெரிக்கா என்று செட்டிலாகிவிட்டார்கள். கீழத்தெருவைச் சேர்ந்த சில ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோர் கொஞ்சம் நிலம் வைத்து ஏதோ விவசாயம் செய்கிறார்கள். சிலர் சிறு தொழில்கள், கீழ்மட்ட அரசு, தனியார் வேலை என்று வாழ்கிறார்கள்.

மீதிப்பேரும், கிராமத்தின் எல்லையிலிருக்கும் சேரிகளைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோரும் உடலுழைப்பு வேலைகளுக்காக பெரு நகரங்களை நோக்கி செல்கின்றனர்.
தஞ்சையைச் சேர்ந்த கூலி விவசாயிகள் கேரளாவில் கம்பி கட்டும் வேலைக்கு போவது, தென்மாவட்டங்களைச் சேர்ந்தோர், மும்பை, திருப்பூருக்கு செல்வது, தரும்புரியைச் சேர்ந்தோர் பெங்களூரூவில் கட்டிட வேலைக்கு செல்வது, வட மாவட்டங்களைச் சேரந்தோர் சென்னைக்கு வந்து பிழைப்பது என்று இங்கேயே அந்த நாடோடி வாழ்க்கை இருக்கிறது.


ஆக மறுகாலனியாக்கத்திற்கு தேவைப்படும் மனித வளத்தை சாதியைப் பாதுகாக்கும் பார்ப்பனிய அமைப்பு இப்படித்தான் வழங்குகிறது. அடுத்து உழைக்கும் மக்கள், நடுத்தர வர்க்கம் அரசியல் உணர்வு பெறக்கூடாது என்பதற்காகவே இங்கே பார்ப்பன இந்து மதம் பெரும் பொருட்செலவில் பின்பற்றப்படுகிறது. சாதிக்கு ஏற்ற சாமியார்கள், மடங்கள், நவீன கார்ப்பரேட் சாமியார்கள், ஆதினங்கள், கோவில்கள் எல்லாம் அரசு, முதலாளிகளால் செவ்வனே பராமரிக்கப்படுகிறது.


ஐ.டி துறை நடுத்தர வர்க்கத்தை ஆற்றுப்படுத்தும் வேலையை டபுள் ஸ்ரீ ரவி சங்கர் பார்த்துக் கொள்வது போல உடலுழைப்பு மக்களை பங்காரு பாதுகாக்கிறார். சங்கர மடத்தின் முன் முழு இந்தியாவின் அதிகார வர்க்கமும் மண்டியிடும். வட இந்தியாவில் உள்ள நாட்டுப்புறங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் ஆட்சியாளராக பண்ணையார்கள்தான் இன்றும் இருக்கின்றனர். யாருக்கு வாக்களிப்பது என்பதைக்கூட இவர்கள்தான் தீர்மானிக்கின்றனர். அதே போல நகரங்களில் சொத்துக்களை வைத்துக் கொண்டு அரசியலில் ஒரு ஆளாக வருவதும் இந்த பண்ணையார்கள்தான்.

ஆக பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பு இந்தியாவின் முதலாளித்துவத்திற்கு அளப்பரிய சேவை செய்வதை புரிந்து கொள்ள முடியும். தீபாவளி, புத்தாண்டு, அஷ்யத் திரியை இதர பார்ப்பனியப் பண்டிகளெல்லாம் மக்களிடையே நுகர்வுபொருட்களை கொண்டு சேர்ப்பதற்கான நாட்களாக முதலாளிகளால் கொண்டாடப்படுகின்றன.

இறுதியாக கிராமங்களில் விவசாயம் அழிக்கப்டுவதால் யாருக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ அந்த வர்க்கங்களின் உழைப்பை மலிவாகச் சுரண்டிதான் நகரங்களும், முதலாளிகளும் வாழ்கின்றனர். கிராமங்களில் உழைக்கும் மக்களுக்கு நிலம் சொந்தமாகி, விவசாயம் செய்து பிழைக்க முடியும் என்ற நிலை வந்தால் நகரத்து முதலாளிகளுக்கு மலிவான உழைப்பாளிகள் கிடைக்கமாட்டார்கள்.

ஆதலால் பார்ப்பனிய நிலவுடமை அமைப்பு இங்கே சமூக ரீதியாக இருப்பதோடு முதலாளித்துவத்திற்கும் சேவை செய்கிறது. பதிலுக்கு முதலாளித்துவம் அதை அழிக்காமல் தேவையான அளவு சீர்திருத்தம் செய்கிறது. இடையில் சிக்கிக் கொண்ட உழைக்கும் மக்கள் என்னடா வாழ்க்கை இது என்று நாட்களை கழிக்கிறார்கள்.

நன்றி வினவு
("வினவு " இல் இருந்து )

3 Jun 2011

இந்தியாவின் முதல் மகாத்மா



ஜோதிராவ் பூலே : இந்தியாவின் முதல் மகாத்மா


வரலாறு என்பது எல்லைகளோ, முடிவுகளோ இல்லாத நிகழ்வுகளின் பதிவேடு. சில சமயங்களில் வரலாற்றின் கண்கள் குருடாவ-துண்டு, பல சமயங்களில் குருடாக்கப்-படுவதுண்டு. குறிப்பாக, நமது இந்திய வரலாறானது தன் பக்கங்களிலே பல உன்னதங்களைப் பதிவு செய்யத் தவறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்தவகையில் சமூகநீதிக் களங்களில் ஜாதி ஒழிப்பு, வருண ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற சமூகக் களையெடுப்புப் பணி-களில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டோரின் கொள்கைகளை, வாழ்வியலை (அல்லது, குறைந்தபட்சம் அவர்களின் பெயரைக்கூட) பதிவு செய்யத் தவறிவிட்டது. அல்லது திட்டமிட்டுப் புறக்கணித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒருமுறை, தந்தை பெரியார் அவர்கள், புத்தரைத் தவிர, வள்ளுவரைத் தவிர ஜாதி ஒழிய வேண்டும் என்று சொன்னவனையே காணவில்லையே? இல்லாமலா இருந்திருப்-பான்? எனக்கும் சந்தேகம்தான். இருந்திருப்-பான்; அவன் பெயர் வெளிவராதபடி ஒழித்துக் கட்டிவிட்டான்! ஜாதி இருக்க வேண்டும் என்று சொன்னவனைப் பெரிய ஆளாக்கி வைத்திருக்கிறான் என்று சமூகநீதிக் களங்களில் தம்மை அர்ப்பணித்தோரை வரலாற்றில் எங்ஙனம் சிலர் திட்டமிட்டுப் புறக்கணித்திருக்-கிறார்கள் என்பதைப் பட்டவர்த்தனமாய் வெளிப்படுத்துகிறார்.

குறிப்பாக, நம் இந்திய சமூகத்தில் புரையோடிக்கிடந்த (இன்றும் கிடக்கிற) ஜாதிய வேறுபாடுகளை, தீண்டாமையை ஒழித்து சமத்துவ சமுதாயம் மலரப் பாடுபட்டோர் எண்ணற்-றோர். அவர்களில் பலரின் வரலாறுகள், இன்று நமக்குத் தெரியாது; அவர்களின் பெயர்கள் வரலாற்றிலிருந்தே திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது. கடவுளை மறுத்த மகாவீரரையும், புத்தரையும் இன்று கடவுள்களாக்கி வரலாற்றில் திரிபுவாதம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் அந்தவகையில் சமூகநீதிப் போராட்டங்களில் தம்மை அர்ப்-பணித்துக் கொண்டோர் எண்ணற்றோர்; எனினும், அதில் கணிசமான வெற்றிகளை ஈட்டியோர் தென்னகத்தில் தந்தை பெரியாரும், வடபுலத்தில் அண்ணல் அம்பேத்கருமே ஆவர். அந்தவகையில், அம்பேத்கர் தோன்றிய அதே மகாராட்டிரத்தில் அம்பேத்கர், பெரியார் போன்ற 20ஆம் நூற்றாண்டு சமூகப் புரட்சியாளர்-களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர் மகாத்மா ஜோதிராவ் பூலே.

ஜோதிராவ் பூலே அவர்கள் 1827 ஆம் ஆண்டில் மகாராட்டிரத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் உள்ள லால்கன் என்னும் கிராமத்தில் பிறந்தவர். மகாராட்டிரத்தின் ஒடுக்கப்பட்ட ஜாதிப் பிரிவுகளில் ஒன்றான மாலி என்ற பிரிவைச் சேர்ந்தவர். இளமைப் பருவம்தொட்டே சீர்திருத்த எண்ணங்கள் முளைவிடத் தொடங்கியது; அதற்குக் காரணம், சிறுபிராயமாக அவர் இருந்தபோது ஆதிக்க ஜாதியினரின் ஒடுக்குமுறைகளால் அவர் குடும்பமும், அவரும்பட்ட இன்னல்கள் பின்னாளில் அவரை ஓர் சமூகப் புரட்சியாளராக மாற்றியது.

பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் எனப்பட்டோர் கல்வி பெறுவதன் மூலமே சமூகத்தில் உயர்நிலை எய்த முடியும் என உறுதியாக நம்பினார். எனவே, மிகவும் தாழ்த்தப்-பட்ட ஜாதியினரின் பெண் குழந்தைகளுக்கான பள்ளியை 1848 ஆம் ஆண்டில் இந்தியாவில் முதன்முதலாகத் தொடங்கினார்.

அப்பள்ளியில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட மகார், மாங் போன்ற பிரிவுப் பெண்களுக்கு முன்னுரிமை தந்தார். எனினும், உயர்ஜாதியினரின் மிரட்டல்களால் அப்பள்ளிக்கு ஆசிரியர்கள் கிடைக்-காதநிலை ஏற்பட்டபோது தன் மனைவி சாவித்திரிக்குக் கல்வி புகட்டி அவரை அப்பள்ளி-யின் ஆசிரியராக்கினார். அதுமட்டுமின்றி, தன்வீட்டுக் குடிநீர்க் கிணற்றை, தாழ்த்தப்-பட்ட மக்களுக்காகத் திறந்துவிட்டார். இன்றும்-கூட இச்செயல் அசாதாரணமான, தீரமான ஒன்றாகும்.

பெண் கல்வியை ஆதரித்த பூலே அவர்கள் 1851ஆம் ஆண்டில் அனைத்து ஜாதிப் பெண்களுக்கு-மான பள்ளியைத் தொடங்கினார்; 1855 இல் மாலை நேரப் பள்ளி ஒன்றையும் தொடங்கினார். பெண் விடுதலை என்று குறிப்பிடாத பூலே ஆண் - பெண் இருவருக்குமான சமமான மனித உரிமைகள் வேண்டுமென்று வலியுறுத்தினார். விதவைகள் மறுமணத்தை ஆதரித்த பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்க்கவும் தயங்கவில்லை. பூலேவின் செயல்பாடுகளும், புரட்சிகர நடவடிக்கைகளும் உயர்ஜாதியினர் எனப்பட்டோருக்கு ஆத்திரத்தைக் கிளப்பவே, பூலேயின் தலைக்கு விலை பேசப்பட்டது; 1856இல் அவரைக் கொலை செய்ய நடந்த முயற்சி மத வெறியின் உச்சம் என்பதைத் தவிர வேறென்ன?....

ஒருவகையில், பூலே அவர்கள் தந்தை பெரியாருக்கும் முன்னோடியாகவும் திகழ்ந்தார் எனக் கூறமுடியும். ஏனெனில், பெரியார் அவர்-களின் கண்ணோட்டத்தில் திருமணம் என்பது புனிதத் தன்மை வாய்ந்த சடங்கு அல்ல; மனம் ஒத்த ஆண், பெண் இருவரிடையேயான ஓர் ஒப்பந்தம் மட்டுமே.

பூலே இளம் பெண்கள், திருமணம் செய்து போகும் குடும்பத்தின் ஒப்பந்த ஊழியராகச் செல்கின்றனர் என்ற கருத்தினை நோக்கி தனது வாதத்தைக் கொண்டு சென்றார். (தமிழாலயம், நவம்பர் - டிசம்பர், ப13.) அதேபோன்று, திருமணச் சடங்கு முறைகளை மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பூலேயைப் பின்பற்றி பல சமூகச் சீர்திருத்தவாதிகளும் திருமணச் சடங்குகளைப்பற்றியே சிந்தித்துச் செயல்பட்டனர் என்று கெய்ல் ஓம்வெல்ட் என்ற அறிஞர் கூறுகிறார்.

பெண்கள், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரின் நலன் காக்கவும், அவர்களின் நிலை உயரவும் பள்ளிகளைத் தொடங்கி அறிவுப் புரட்சிக்கு வித்திட்ட பூலே 1873ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதியன்று சத்ய சோதக் சமாஜ் (உண்மை தேடுவோர் சங்கம்) என்னும் சங்கத்தைத் தொடங்கினார். இச்சங்கம் தொடங்கப்பட்டதற்குப் பிறகு, கல்வியைப் பரப்பல், விதவைத் திருமணத்தை ஊக்குவித்தல், புரோகித ஒழிப்புத் திருமணங்களை நடத்தல், சமூக ஏற்றத் தாழ்வுகளைப் போக்கல், உழவுத் தொழிலை மேம்படுத்தல் ஆகிய சமூகப் பொருளியல் காரணங்களுக்காகப் பாடுபட்ட இவ்வமைப்பே இந்திய மண்ணில் சமூக நீதிக்கான போராட்டத்தைத் தொடங்கி முன்னெடுத்துச் சென்றது. (க. நெடுஞ்செழியன், சமூகநீதி, ப.154-155).

அதோடன்றி, 1888ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் நாளில் பூனேயில் நடந்த பொதுக்கூட்டத்தில், பூலேயின் கொள்கைச் செயல்-பாட்டையும், சீர்திருத்த நடவடிக்கை-களையும் பாராட்டி அவருக்கு, மகாத்மா என்ற பட்டம் சூட்டப்பட்டது. அன்றுமுதல் மகாத்மா ஜோதிராவ் பூலே என்றே மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வந்தார். அண்ணல் காந்தியடி-கள் மகாத்மா என்று அழைக்கப்பட்டது, பின்னர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மராட்டிய மண்ணில் கொள்கை முழக்கம் செய்தும், அறிவுபுகட்டியும் சமூகப் புரட்சிக்கு வித்திட்ட மகாத்மா பூலே 1890ஆம் ஆண்டு மறைந்தார். அதற்கு அடுத்த ஆண்டான 1891இல் அண்ணல் அம்பேத்கர் பிறந்தார். பூலேயை வழிகாட்டியாய்க் கொண்டு கொள்கை முழக்கம் செய்த கோமேதகம்தான் அம்பேத்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறு பல சமயங்களில் உன்னதப் பதிவுகளைத் தவறவிட்டிருப்பதற்கு மகாத்மா ஜோதிராவ் பூலே ஒரு சிறந்த உதாரணம். பூலே அவர்களின் பெயர்கூட இன்று நம்மில் பலருக்குத் தெரியாது என்பதை வேதனையுடன் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் பூலே போன்ற சமூக நீதிப் போராளிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

பூலே போன்ற சமூக நீதிப் போராளிகளையும், அவர்தம் கொள்கைகளையும், வளரும் இளைய சமூகத்திற்குத் தெரியப்படுத்தாமல் சமூக நீதியை வென்றெடுக்க முடியாது. சமூக ஏற்றத் தாழ்வுகளற்ற சமுதாயம் அமைய, அந்த ஏற்றத் தாழ்வுகள் நீங்கப் போராடியவர்களின் வரலாற்றை நாம் முதலில் அறிந்திருக்க வேண்டும். அல்லாமல், சமூக ஒருமைப்பாடு, சமத்துவ சமுதாயம் என்பவைகளெல்லாம் வெறும் பகற்கனவாகவே!

க. சக்திவேல் எம்.ஏ.பி.எட் (உண்மை )

அறிவுபெற்றெடுங்கள்



அச்சம் விடுங்கள்; அறிவுபெற்றெடுங்கள்



அறிவோடு வாழ வேண்டுமென்றால் பொருட்காட்சி சாலைக்குச் செல்லுங்கள். வெளியூர் சென்று ஆங்காங்குள்ள தொழிற் சாலைகளைக் காணுங்கள். மற்ற மதக்காரர்கள் நடப்பதைப் பாருங்கள். ஆங்காங்குள்ள மக்களோடு பழகி ஒற்றுமை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வரும் விஞ்ஞான உண்மைகளை அறிந்து கொள்வதில் ஆசை கொள்ளுங்கள். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது எப்படி வீண் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கிறதோ, அது போல் கும்பிட்ட குழவிக் கல்லையே கும்பிட்டுக் கொண்டிருப்பதும் வீண் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சூத்திரப்பட்டம் நீங்க வேண்டும் என்பதை முக்கியமாகக் கொள்ளுங்கள்.

நீங்கள் எவ்வளவுதான் உயர்ந்த பதவியிலிருந்தாலும், எவ்வளவுதான் பணம் படைத்திருந்தாலும் உங்கள் சூத்திரப் பட்டம் நீங்காதவரை, நீங்களும், உங்கள் மனைவி மக்களும் சமுதாயத்தில் உயர்வான யோக்கியதை அற்றவர்களாகவே, பார்ப்பனர்களுக்குத் தாழ்ந்தவர்களாகவே கருதப்படுவீர்கள் என்பதை உணர்ந்து இந்த இழிவுப் பட்டம் ஒழிய எங்களோடு சேர்ந்து உழையுங்கள்.

பத்திரிகை வாயிலாகவும், சித்திரங்களின் வாயிலாகவும், சட்டம் வாயிலாகவும், படக்காட்சிகளின் வாயிலாகவும், நாடகங்கள் வாயிலாகவும் மேடைப் பிரசங்கங்கள் வாயிலாகவும் கதாகலாட்சேபங்கள் வாயிலாகவும் உங்களை என்றென்றும் பார்ப்பனரின் அடிமை மக்களாக வைத்திருக்க இன்று பலமான சூழ்ச்சி செய்யப்பட்டு வருகிறது என்பதை உணர்ந்து உறுதியோடு பணியாற்ற முன்வாருங்கள்.

******

உங்களுக்காகவே இல்லாவிட்டாலும், உங்களின் பிற்கால சந்ததிகளின் முன்னேற்றத்திற்காகவேணும் நீங்கள் மூட நம்பிக்கையை ஒழிக்க முன்வாருங்கள். கல் சாமிக்கு கை தூக்கித் தண்டனிடாதீர்கள். நெற்றியில் மதக்குறி தீட்டிக் கொள்ளாதீர்கள்.

என்ன மதத்தினர் என்று கேட்டால் வள்ளுவர் மதம் என்று சொல்லுங்கள் உங்கள் நெறியென்னவென்றால் குறள் நெறி என்று சொல்லுங்கள். குறள் நெறி என்று சொல்வீராயின் உங்கள் முன் எந்த பிற்போக்குவாதியும், எப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரனும் முன் நிற்கக் கூசி ஓடிவிடுவான். குறளை எவனாலும் மறுத்துக் கூற முடியாது.

அவ்வளவு இயற்கைக்கும், அறிவுக்கும் இயைந்ததாக இருக்கிறது அது. எனவே, குறளைப் படியுங்கள். அதன் வழிப்படி நடவுங்கள். அதையே எங்கும் பிரசாரம் செய்யுங்கள். உங்களுக்கு மனத் தூய்மை ஏற்படும். முன்னேற்ற அறிவில் ஆசையும், நம்பிக்கையும் ஏற்படும்.

ஆரியப் பித்தலாட்டத்திற்குச் சரியான மருந்து, சரியான மறுப்பு திருக்குறள்தான். இதை நான் மட்டுமே கூறவில்லை. திருவள்ளுவ மாலையிலேயே பல புலவர்கள் கூறியுள்ளார்கள், ஆரியப் புரட்டை வெளியாக்கி, மடமையைப் போக்கும் நூலே திருக்குறள் என்று. எனவே, குறள் வழிபட்டு நீங்கள் புத்தறிவு பெற்ற புது மனிதராகுங்கள். அதில் ஆரியப் போக்கு காணப்படலாம். அதைச் சரிவர உணரும்வரை தள்ளி வைத்து விடுங்கள்.

தோழர்களே, பட்டிக்காட்டானை விட இந்தச் சென்னைப் பட்டினத்துக்காரர்களே பெரிதும் மூட நம்பிக்கைக்காரர்களாக இருக்கிறார்கள். இங்குதான் சாமியாட்டம் மிக அதிகமாயிருக்கிறது. நமது பெண்கள் சாமியாடுவதைப் பார்த்தால் சாமி என்று ஒன்று இருக்குமானால், அதுகூட ரொம்ப வெட்கப்படும்.

கண்ட பயல்கள் இன்று சாமியாட்டம் ஆடி அல்லது பிறரை ஆட்டி வைத்து காசு பிடுங்கித் தின்ன ஆரம்பித்து விட்டிருக்கின்றனர். அந்தச் சந்தர்ப்பத்திலெல்லாம் நல்ல பிரம்பால் நாலு சூடான அடி கொடுத்துப் பார்க்க வேண்டும். அப்போது காணலாம் எவ்வளவு சீக்கிரமாக அந்தச் சாமி மலையேறி விடுகிறது என்பதை. கிராமங்களி-லெல்லாம் இப்போது சாமி ஆடினால் நல்ல உதை கிடைக்கிறது. அதனால்தான் சாமியாட்டம் அங்கு குறைந்துவிட்டது.

தஞ்சை சப்ஜெயிலில் ஒரு வேடிக்கை நடந்தது. என்னோடு ஜெயில் சூப்பரின்டெண்-டென்ட், அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது 14 வயது பையன் ஒருவன் ஜெயிலில் ரிமாண்டாக அனுமதிக்கப்பட அழைத்து வரப் பட்டான். ஜெயில் சூப்பரின்டெண்டென்ட் இதோ பார் உன் சிஷ்யன் வந்து விட்டான் என்று கூறினார். என்ன சங்கதி என்றேன்.

புரோகிதன் எவனோ திவசம் செய்வித்து விட்டு அரிசி, பருப்பு வாங்கிக் கொண்டு போனானாம். அவனை மடக்கி இவன் அடித் தானாம். அதனால் ரிமாண்டு செய்யப் பெற்று வந்திருக்கிறான் என்று கூறினார். தஞ்சை சப் ஜெயில் சூப்பரின்டெண்டென்ட் ஜெயில் வாரண்டைக் காட்டிக் கூறினார். நான் அந்தப் பையனுக்குக் கூறினேன்.

இது தவறு. அந்தப் பார்ப்பானுக்கு இதைக் கொடுத்தவனைப் போய் ஏண்டா முட்டாள் பயலே அரிசி, பருப்பு அவனுக்கு அழுதே. பாட்டாளி பட்டினி கிடப்பது உன் கண்ணுக்குத் தெரிய வில்லையா? என்று கேட்டு, அவன் கோபம் கொண்டு அடித்தால், நீ அந்த அடியை வாங்கிக் கொண்டு அவனுக்கும் விளக்கம் சொல்வதை விட்டு, நீ இப்படி அவனால் கொடுக்கப்பட்டு வாங்கி வந்த பார்ப்பானை அடிக்கலாமா என்று கேட்டேன்.

அதெல்லாம் சொல்லாதீங்க. இந்தப் பார்ப்பானுங்களே இப்படித்தானுங்க என்று ஏதோ சொல்லவே, அவனை அவர் வைது (திட்டி) அனுப்பி விட்டார். இப்படியாக நாம்தான் முட்டாள் தனமாக பார்ப்பானுக்கு அழுது வருகிறோமே ஒழிய, நாம்தான் நம் மனைவியை இழுத்துக் கொண்டு மொட்டை அடித்துக் கொண்டு, கோவிந்தா போட்டுத் தெருவில் வெட்க-மில்லாமல் நடந்து கொண்டு, காவடி தூக்கிக் கொண்டு, குரங்கு போல் குதித்துக் கொண்டு, பார்ப்பானுக்கு அழுது, அவன் வயிற்றை வீங்க வைத்து, முட்டாளாகிக் கொண்டு வருகிறோமே ஒழிய, அவனொன்றும் அப்படிப்பட்ட காரியங்களைச் செய்வதில்லை.

எனவே, நீங்கள் அறிவு பெற்று முட்டாள்-தனத்தைக் கைவிடுவீர்களேயானால் அவனொன்றும் உங்களை அசைத்து விடவோ, அழித்து விடவோ முடியாது.

நான் எனது 17-ஆவது வயதிலேயே இந்தக் கடவுளர்களையும், இந்தப் பார்ப்பனர்களின் பித்தலாட்டங்களையும் எதிர்க்க ஆரம்பித்து விட்டேன்.

அதிலிருந்து இன்று வரைக்கும் அதாவது சுமார் 53 ஆண்டுகளாக நானும்தான் இதே பகுத்தறிவுப் பிரசாரம் செய்து வருகிறேன். இதனால் நானென்ன சீக்கிரத்தில் செத்துப் போய் விட்டேனா? அல்லது என் சொத்தெல்லாம் அழிந்து போய் விட்டதா? அல்லது எனக்கு இழிவு ஏற்பட்டு விட்டதா? இல்லையே. பின் ஏன் நீங்கள் பகுத்தறிவு வழி நடக்க அஞ்சுகிறீர்கள். அச்சம் விடுங்கள்; அறிவு பெற்றெழுங்கள்.

(26.12.1948 அன்று சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரை - விடுதலை 31.12.1948)

சிந்திப்பதில் சிறந்தவன் மனிதன்







சிந்திப்பதில் சிறந்தவன் மனிதன்



நாத்திகர்கள் எண்ணிக்கையில் இன்று அதிகரித்துக் கொண்டிருப்பதால் மத வியாபாரிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. அதன் எதிரொலியாக, ஓ நாத்திகர்களே நீங்கள் நினைப்பது போன்று இறந்த பிறகு ஒரு வாழ்க்கை இல்லை என்றால், அது உண்மையாகவே இருந்தாலும் கடவுளை நம்பி வழிபட்டதால் எங்களைப் போன்றவர்களுக்கு அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை.

ஆனால், கடவுளை வணங்காமல் மறுத்துக் கொண்டும், இழிவாகப் பேசிக்கொண்டும் - கவலையின்றி காலம் முழுவதும் வீணாக வாழ்வைக் கழித்துவிட்டு, இறப்புக்குப் பின் நாங்கள் நம்புவது போல் மறுவாழ்வு இருந்து, உங்கள் முன் கடவுள் தோன்றி கேள்விகள் கேட்டால் உங்களது நிலைமை என்னவாகும்? என்று மத நிறுவனத்தார்கள் நம்மைப்பற்றிக் கவலை கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். பாவம்...

ஆக எப்படியாவது பயமுறுத்தித்தான் கடவுளை நம்பவைக்க முடியும் என்கிற அடிப்படைத் தத்துவத்தைக் கொண்டுதான் ஆண்டாண்டுக் காலமாய் ஏமாற்றி வருகிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளலாம். ஆனால், நாத்திகர்களின் நிலைமை அப்படி அல்ல. இல்லாத ஒன்றை இல்லை என்கிறோம்.

இருப்பது தெரியவந்தால் ஏற்றுக் கொள்வோம். இக்கொள்கையில் ஈடுபாடு உள்ளவர்கள் இணைகிறார்கள். இன்னும் சிலர் வெளியில் இருந்தே ஆதரவுக் குரல் கொடுக்கிறார்கள். இணைந்தவர்கள் பிரியும் போது யாரும் யாரையும் மிரட்டவோ, கண்டனக் குரலோ கொடுப்பதும் இல்லை.

இல்லாத கடவுளை நிரூபிக்க முடியாதவர்கள் வேடிக்கையாக ஒன்றைக் கூறுவார்கள். எதையும் கண்ணால் பார்த்து விட்டுத்தான் நம்புவேன் என்றால் அதற்கு ஆறாம் அறிவு தேவையில்லை. அய்ம்புலன்களை மட்டுமே கடவுள் நமக்குத் தந்திருந்தால்தான் அது சாத்தியமாகும். ஆனால், அதையும் தாண்டி சிந்திக்கும் திறனை கடவுள் நமக்குத் தந்திருக்கும்போது இது சாத்தியமில்லை, என்பதாக புத்திசாலித்தனமாக வாதிடுவதை நாம் பார்க்கலாம்.

பிறக்கும்போதே நமக்குச் சிந்திக்கின்ற திறன் கடவுளால்தான் வழங்கப்பட்டது எனில், ஒவ்வொருவரும் பிறப்பு முதல் இறப்புவரை ஒரே கடவுளைத்தான் வணங்கியிருக்க வேண்டும். இதிலிருந்தே சிந்திக்கும் திறன் கடவுளால் வழங்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது.

மேலும், அய்ந்தறிவு பெற்றவைகள் யாவும் ஒரே சீராக கடவுளைப்பற்றிய சிந்தனையே இல்லாமலிருப்பது போல, ஆறாம் அறிவு பெற்ற மனிதர்கள் மட்டும் ஒரே சீராக கடவுளையோ, வணக்க வழிபாட்டையோ ஏற்காமல் போனது ஏனோ? எனவே, பல்வேறுபட்ட கடவுள்களை வணங்குவதும், மறுப்பதும், இடைப்பட்ட நாம் இவர்தான் தாய், தந்தை, கடவுள் என உணர்த்தும்போதும், அதையே அவர்களும் கடைப்பிடிக்கும் போதும் நாம் மாறுபடுத்தப்பட்டோம் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

சிந்திக்கும் திறன் அய்ந்தறிவு பெற்றவை களுக்கும் உண்டு என்பதை மறைமுகமாக மறைக்கப் பார்ப்பதும் மத வியாபாரிகளின் ஒருவகைத் தந்திரமேயன்றி வேறில்லை. இரை தேடுதல், குஞ்சுகளுக்கு உணவளித்தல், தன்னையும் தன் குட்டிகளையும் பாதுகாத்தல் போன்ற செயல்களும் சிந்தனைக்குரியதுதான். ஒரு சிறு குருவி தனக்காகக் கூடு கட்டுகிறதென்றால் அது சிந்திக்காமலா கட்டுகின்றது? அதுபோல் அடுக்குமாடிக் கட்டிடங்களில் இருக்கும் பூனைக்குட்டி, (பழக்கமில்லாத இடமாக இருந்தால்) கீழிறங்க அது கையாளும் யுக்திகளை நாம் நேரிலேயே பார்க்கலாம்.

அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து உற்றுநோக்கிய பின், தண்ணீர்க் குழாய், அல்லது ஜன்னல்கள் வழியாக என அதற்கு ஏதுவான ஒரு பிடிப்பை ஏற்படுத்திக்கொண்டு தான் கீழே இறங்குமே தவிர, மொட்டை மாடியிலிருந்து செங்குத்தாக எந்தப் பூனையும் குதித்துவிடாது. இவ்வளவும் சிந்தித்துச் செயல்படாமலா நடைபெறுகின்றது?

காட்டுமிராண்டி காலத்துக் கடவுள் வகைகளை வணங்குதலையே சிந்தித்துத்தான் நடைபெறுகிறது எனும்போது, அதனை மறுத்துக் கூறுவது சிந்தனைக்குரியது இல்லையோ! ஒருசேர இவ்விரண்டு சிந்தனைகளையும் மனிதர்களுக்குக் கொடுத்த வன் நிச்சயமாக கடவுளாக இருக்க முடியாது. ஆகவே, சிந்தனை என்பது அறிவின் வளர்ச்சியைப் பொறுத்து மாறுபடுகிறது.

இது தான் கடவுள், இதைத்தான் வணங்க வேண்டும், இதைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தால்தான் சிந்தனை முடக்கப்படுகிறது. ஏன் வணங்கவேண்டும், கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்கும்போதுதான் சிந்தனை மாறுபடுகிறது. இவற்றைப் பகுத்து அறிந்தவனே பகுத்தறிவுவாதி. கண்மூடி ஏற்பவன் மூடநம்பிக்கைவாதி.

ஆதலால், கண்மூடி வணங்குவதைவிட ஒரு கணம் சிந்தியுங்கள் தோழர்களே!! சிந்திப்பதில் சிறந்த இனம் மனத இனமே!!!

இனியவன், துபாய் (உண்மை )

புத்தி கொள்முதல் செய்யுங்கள்



பக்தி மூட நம்பிக்கையாளர்களே! புத்தி கொள்முதல் செய்யுங்கள்



அந்தோ கொடுமை! அய்யப்ப சாமிக்கு வேண்டுதல் என்ற பக்தி மூடநம்பிக்கை காரணமாக, மகர விளக்கு வெளிச்சத்தைக் காண என்று தமிழ்நாட்டிலிருந்து செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை பெருகுகிறது என்பது, இந்த அறிவியல் யுகத்தில் பெருமைப்படக் கூடியது அல்ல; வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும். இது மோசடி என்பது முன்பே வெளியான உண்மை.

இங்கே தமிழ்நாட்டில் தெருவுக்குத் தெரு, மூலைக்குமூலை, (பெரும்பாலும்) வீட்டுக்கு வீடு சாமிகளும், கடவுள்களுக்குக் கோயில்களும் உள்ளன. திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லை. குறைந்த பட்சம் மாதம் ஒருமுறையாவது குறிப்பிட்ட ஊர்களில் பக்தி வியாபாரம் - கடவுளின் பெயரால் சுரண்டல் பிசினஸ் செழிப்பாக நடைபெறுகிறது!

இந்நாட்டில் உள்ள ஊடகங்களும் இந்த பக்தி போதைகளை ஊக்குவித்து, அந்த மூடநம்பிக்கைகளைப் பெருக்குவதன் மூலம் தங்கள் வியாபாரத்தைப் பன்மடங்கு பெருக்கிக் கொள்ளுகிறார்கள்.

நாய் விற்ற காசு குரைக்காது!
கருவாடு விற்ற காசு நாறாதே!

அதுபோல மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி சில ஏடுகளும், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் இந்த பக்தி மூடநம்பிக்கையை - ஓர் ஊரில் நடப்பதை நேரடி ஒளிபரப்பு பொதிகை மற்றும் வானொலி ஒலி பரப்பு என்று அரசின் மதச் சார்பின்மையை, ஊடகங்கள் அக்கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு அநியாயமாய் இப்படி மக்களை அறியாமைப் படுகுழியில் தள்ளுவார்களா?

ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி போன்ற பார்ப்பன இந்துமதவெறி அமைப்புகள், புதுப்புதுப் பண்டிகைகளைத் தமிழ்நாட்டில் இறக்குமதி செய்து மக்களுக்குப் பக்தி போதையை ஊட்டுவது - இந்த மதபோதை மது போதையை விடக் கொடுமை.

எப்படி எனில், குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு என்பது பழமொழி. அது தெளியும் சில மணி நேரங்களில்! ஆனால் மத போதை, பக்தி போதை என்பது, அபின், கஞ்சா, சாராயம் மற்றும் பல போதை வஸ்துக்களைவிட மிகவும் கொடுமையானது.

அவை உடலைக் கெடுக்கின்றன. மூடநம்பிக்கை, பக்தி போதையோ மனித மூளையையே விலங்கிட்டு செயல்படாததாக ஆக்குகின்றது! ஈரோட்டு மருந்துதான் ஒரே மருந்து.

திடீர் என அனுமன் ஜெயந்தி என்று குரங்குக்குக் கோயில் கட்டி - வேண்டுமென்றே எங்கு பார்த்தாலும் பெரும் சாலையோரங்களைத் தேர்ந்தெடுத்து சட்ட விரோதமாக எவ்வித அனுமதியும் பெறாமல், பல அடி உயரத்திற்கு குரங்கு - அனுமார் நிற்கும் சிலை பொம்மையை வைத்து, உண்டியல் வியாபாரத்தைச் செழித்தோங்கச் செய்கின்றனர்.

இவற்றை நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த் துறை, இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைகள் அனுமதிக்கவே கூடாது; யாராவது தனியார் இப்படி பக்திச் சுரண்டல் பிசினசைத் துவக்குவதைக் கண்காணித்து, அதை அறநிலையப் பாதுகாப்புத் துறை தடுக்க வேண்டும்.

கார்ல்மார்க்ஸ் எழுதிய கட்டுரைகள், (இந்தியாவைப் பற்றியவை) இந்தியாவில் குரங்கைக் கடவுளாகக் கும்பிடும் கொடுமையைக் கண்டித்துள்ளார் என்பதை ஏனோ நமது மார்க்சிஸ்ட் தோழர்களும் மறந்துவிடுகிறார்கள்!

கேரளத்து அய்யப்பசாமி வரலாறோ ஆபாசம்! அருவருப்பு நிறைந்தது! ஹரிபுர புத்திரா என்று கோஷம் கொடுத்துக் கொண்டே அங்கே அசல் காட்டுமிராண்டிகள் போல தங்கள் உருவங்களை மாற்றிக்கொண்டு மெத்தப்படித்த மேதாவிகள், பதவியாளர்கள், ஏன் உயர்நீதிமன்ற நீதிபதிகள், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகள் உள்பட பலரும் செல்வது - அவர்களது மனம் தங்களது அநீதி, அக்கிரம - லஞ்ச வாழ்க்கையை பம்பா நதி என்ற அந்த நீரோடையில் கழுவிவிட்டு வர விரும்புகிறார்கள் போலும்!

ஹரி என்றால் விஷ்ணு (ஆண் கடவுள்); அரன் என்றால் சிவன். ஹரிஅர புத்திரன் என்றால், என்ன பொருள்? மகாவிஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பிறந்தவன் அய்யப்பன் என்றால், ஆணும் ஆணும் கூடி பிள்ளை பெற முடியுமா? எந்த எந்த பக்தி போதையாளனும் யோசிப்பதில்லையே! மகா மகா வெட்கக்கேடு, சரியா?

சாமியே சரணம் என்று கூவிக் கூவி அழைத்து பல நாள் திருமுடி, இருமுடி என்று எல்லா முடியையும் கட்டி, அய்யப்பசாமி யாத்திரை செல்லும் கிரேடுவாரி பக்தர்கள் கன்னிசாமி, குருசாமி, பெரியசாமி என்ற பல ரக பக்திகோடிகள் அங்கு சென்று பத்திரமாகத் திரும்புகிறார்களா?

2011, ஜனவரி- 14-ஆம் தேதி நடந்த கோரமான விபத்து நமது நெஞ்சைப் பிளப்பதுபோல உள்ளது!

சுமார் 115 பக்தர்கள் இந்த விபத்தினால் இறந்துள்ளனர். சடலங்களை அடையாளம் காணுவது கூட எளியதாக இல்லை. இடுக்கி பகுதியில், வண்டிப் பெரியார் பகுதியில் இப்படி ஒரு வரலாறு காணாத விபத்து நடந்து பல உயிர்கள் பலியாகியுள்ளன; சிலரே பிழைத்துப் படுகாயங்களுடன் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

கருணையே வடிவான கடவுள் அவனின்றி ஓரணுவும் அசையாது, எல்லாம் அவன் செயல்? என்பதெல்லாம் வெறும் புருடா - பொய் மூட்டைகள் என்பது இப்போதாவது புரிய வேண்டாமா?

தமிழ்நாட்டிலிருந்து சென்று இறந்த பக்தர்கள் எண்ணிக்கை 40அய்த் தாண்டும் கொடுமையை நினைத்து மிகவும் துன்பப்படுகிறோம், துயரப்படுகிறோம் - மனிதநேயமான அடிப்படையில்!

இது தவிர்க்கப்பட்டிருக்கலாமே - இந்த மூடநம்பிக்கை யில்லாமல் இருந்தால்.

தமிழக முதல் அமைச்சர் மானமிகு கலைஞர், உடனே வருவாய்த் துறை அமைச்சர் திரு. அய். பெரியசாமி அவர்களை அழைத்து குமுளி பகுதிக்கு அவர்களது சடலங்களைத் தத்தம் ஊர்களுக்கு அனுப்பி வைக்கவும், மருத்துவமனையில் உள்ளோருக்கு மருத்துவச் சிகிச்சையை முடுக்கவும் ஆணையிட்டு விரைந்து செயல்பட வைத்துள்ளார்கள் என்பது மிகவும் ஆறுதல் அளிப்பதாகும்!

இறந்தவர்களுக்குத் தலா ஒரு லட்சம் தொகையை அளித்துள்ளார்கள்.

கடவுளை மற ; - மனிதனை நினை என்ற தந்தை பெரியாரின் கோட்பாட்டை அவர்தம் குருகுல சீடர் மிக்க மனிதநேயத்துடன் ஆட்சியின் மூலம் தனது கடமையை வழுவாது செய்கிறார்.

இழப்புக்காக நாம் வருந்துகிறோம், வேதனைப் படுகிறோம். பக்தர்களின் உயிர் என்றாலும் மனிதர்கள் உயிர்தானே? அவர்தம் குடும்பங்களின் கதறல்கள் நம் உள்ளத்தில் ரத்தக் கண்ணீரை அல்லவா வரவழைக்கிறது?

மூடநம்பிக்கை இப்படி ஆண்டுதோறும் பலி வாங்கியும் மக்கள் புத்தி பெறாமல், மீண்டும் குடிகாரன் - குடிப் பழக்கத்திற்கே அடிமையாவது போல் ஆகிறார்களே என்ற வேதனை நம்மை வாட்டுகிறது!

காளஹஸ்தி கோயில் கோபுரம் இடிந்து விழுந்து நொறுங்குகிறது; அக்கோயிலில் விண்வெளி ராக்கெட் விடும் விஞ்ஞானி போய் வேண்டுதல் செய்து விட்ட ராக்கெட் விண்கலம் கடலில் சுக்கல் நூறாகி விழுந்து நொறுங்கியதுதானே மிச்சம்?

திருப்பதி வெங்கடாஜலபதி, குருவாயூரப்பன், காளஹஸ்தி கடவுள் என்ற கூட்டணியால் கடுகளவு பலனாவது ஏற்பட்டதா?

விஞ்ஞானிகளே இவ்வளவு மூடநம்பிக்கையாளர் களாகி அரசின் மதச் சார்பின்மைக்கு விரோதமாக நடந்தால், சாதாரண அய்யப்பப் பக்தன்பற்றிச் சொல்லவே வேண்டாம்! கறுப்பு வெள்ளிக்கிழமைகள் இனி நடக்கக் கூடாது.
எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இனியாவது பக்தி மூடநம்பிக்கை யாளர்களே, கடவுள்களுக்கு எந்தச் சக்தியும் கிடையாது என்பதைப் புரிந்து புத்தி கொள்முதல் செய்யுங்கள்!


கி. வீரமணி

மதங்கள் அன்பினால் பரப்பப்பட்டதா?



                                                                 தந்தை பெரியார்


மதங்கள் அன்பினால் பரப்பப்பட்டதா? 


பகுத்தறிவாளர் கழகம் துவக்குவதற்கு முன் பகுத்தறிவாளர் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டும். பகுத்தறிவாளர் என்றால் மனிதன். மனிதன் ஒருவனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. மனிதன் ஒருவன்தான் சிந்திப்பான். வாய்ப்பு வசதி, தேவை, வளர்ச்சி இவைகளைப் பற்றி மனிதன் ஒருவன்தான் சிந்திக்கின்றான், நிலைமைக்கேற்பத் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவன் மனிதன் ஒருவனேயாவான். மற்ற எந்த ஜீவனுக்கும் இந்த அறிவு கிடையாது.

பகுத்தறிவுள்ள மனிதன் பகுத்தறிவினைப் பயன்படுத்திச் சிந்திக்காத காரணத்தால் சாம்பலையும், மண்ணையும் பூசிக்கொண்டு இராகுகாலம், குளிகை, எமகண்டம் என்றும், பூனை குறுக்கிட்டால் கெட்ட சகுனம் என்றும் முட்டாள்தனமாக நம்பிக்கொண்டு முட்டாளாக இருக்கின்றான்.

மனிதன் தோன்றிப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகின்றன. அப்படிப்பட்ட மனிதர்கள் கடவுள், மதம், சாஸ்திரம், ஜாதி என்கின்றவைகளில் இன்னமும் நம்பிக்கை கொண்டு மடையர்களாக, முட்டாள்களாக இருக்கின்றனர்.

சுமார் 100, 150 ஆண்டுகளுக்குள், தோன்றிய இரயில், மோட்டார், மின்சாரம், தந்தி, டெலிபோன், ரேடியோ என்பவைகளும், இன்றைக்குத் தோன்றுகின்ற விஞ்ஞான அதிசய அற்புதங்கள் என்பவைகளும் மனிதனின் பகுத்தறிவு வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்டவைகளேயாகும்.

இவற்றையெல்லாம் தன் வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டிருக்கிற நம் ஒரு நாட்டு மனிதன் மட்டும் தான் மதம் - கடவுள் - சாஸ்திரம் என்கின்ற மூடநம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டிருப்பதன் காரணமாக சிந்திப்பது பாவம், பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்வதுபாவம் என்று கருதிக்கொண்டு இன்னமும் காட்டுமிராண்டியாக இருக்கிறான்.

ஆடு, கோழி, பன்றிகளைத் தின்பவன் மாடு தின்பது பாவம் என்கிறான். ஆடு, மாடு, கோழிகளைத் தின்பவன் பன்றி தின்பது பாவம் என்கின்றான். எதனால் பாவமென்றால், மதத்தில் அப்படி இருக்கிறது; பெரியவர்கள் அப்படிச் சொல்லி இருக்கிறார்கள் என்று மதத்திற்கு அடிமையாக இருக்கிறான்.

அதன் காரணமாக மனிதன் அறிவு வளரவேண்டிய அளவிற்கு வளர்ச்சியடையாமல் இருக்கிறான். இங்குள்ள இந்த விஞ்ஞான விந்தைகளைக் கண்டவர்களெல்லாம் இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம், சம்பிரதாயம் என்பவைகளையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு தங்கள் அறிவிற்கு முக்கியத்துவம் கொடுத்துச் சிந்தித்தலேயாகும். உலகில் பகுதிக்கு மேற்பட்ட மக்கள் தங்கள் அறிவிற்கு முதன்மை கொடுத்து அறிவைக்கொண்டு சிந்திக்கின்றார்கள்.

பகுத்தறிவுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நடக்கும் நாடுகள் உலகில் பல இருக்கின்றன. பல கோடிக்கணக்கான மக்கள் பகுத்தறிவாளர்களாக இருக்கிறார்கள்.

நம் ஒரு நாட்டில் மட்டும் எதற்காக இத்தனை மதம்? இதனால் மனிதன் ஒருவனுக்கு ஒருவன் பிரிந்து வேறுபட்டு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான் என்பதைத் தவிர இவைகளால் மனிதன் பெற்ற பலனென்ன? இத்தனைக் கடவுள்களும், மதமும் இருந்து மனிதனை ஒன்றாக்க வில்லையே! இன்றைக்கு உலகம் மிகச் சுருங்கிவிட்டது.

முன் மாதக் கணக்கில் பயணம் செய்து போகவேண்டிய இடத்திற்கு ஒருசில மணிநேரத்திற்குள் இன்று போகும்படியான வசதி கிடைத்துவிட்டது. நினைத்தவுடன் 10 ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள மனிதனிடம் பேசும்படியான (டெலிஃபோன்) சாதனங்கள் ஏற்பட்டுவிட்டன. இரண்டு நாட்களுக்குள் உலகத்தின் எந்தப் பாகத்திற்கு வேண்டுமானாலும் போகும்படியான நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.


இன்னும் மனிதனின் உறுப்புக்களை மாற்றியமைக்கவும், மனிதனின் உறுப்பில் கேடானதை நீக்கி வேறு மிருகங்களின், இறந்த மனிதனின் உறுப்பினை வைத்துச் சரி செய்யும்படியான அளவிற்கு வைத்திய வசதியும் இன்று பெருகியுள்ளதென்றால் இதற்குக் காரணம் மனிதனின் அறிவு வளர்ச்சியினாலேயேயாகும்.

பகுத்தறிவு என்பதற்குச் சக்தி எவ்வளவு இருக்கிறது? அதற்கு எவ்வளவு பலன் இருக்கிறது? அதனால் எவ்வளவு நன்மை விளைகிறது? அதனால் எவ்வளவு கேடுகள் நீங்குகின்றன? என்பவைகளைச் சிந்தியுங்கள். இவற்றையெல்லாம் சிந்திக்காமல் கடவுள் என்கின்ற முட்டாள்தனமான நம்பிக்கையால் மனிதன் வளர்ச்சியடையாமல் கேட்டிற்கு ஆளாகின்றான்.

மனிதனை மாற்றவேண்டும்; மனிதனைச் சிந்திக்கச் செய்யவேண்டும் பகுத்தறிவுடைய வனாக்கவேண்டும். உலகில் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடையவர்கள் பலர் இருக்கின்றனர். என்றாலும், இதில் எவரும் கடவுள் சக்தியை உண்மையில் நம்புவது கிடையாது. நம்பி அதன்படி நடந்து கொள்வதும் கிடையாது.

எவ்வளவு தீவிரமான கடவுள் நம்பிக்கைக்காரனாக இருந்தாலும் தனக்குச் சிறு நோய் ஏற்பட்டால் டாக்டரிடம் சென்றுதான் மருத்துவம் செய்து கொள்கின்றானே தவிர, கடவுள் அருளால்தான் இந்த நோய் நமக்கு வந்தது என்று கருதி சும்மா இருப்பதில்லையே! கடவுள் சர்வ வல்லமை உள்ளவர் என்கின்றபோது அவர் தனது நோயினைத் தீர்ப்பார் என்று கருதி எந்தக் கடவுள் நம்பிக்கைக்காரன் வைத்தியம் செய்து கொள்ளாமல் இருக்கிறான் என்று கேட்கின்றேன்.

இன்று நாட்டிலிருக்கிற கேடெல்லாம் மதத்திற்காக - கடவுளுக்காகச் செய்யப்பட்டவை களேயாகும். சைவன் எத்தனை பேரைக் கொன்றிருக்கின்றான்? முஸ்லிம், கிறிஸ்தவன் எத்தனை பேரைக் கொன்றிருக்கின்றார்கள்? மதத்தையும், கடவுளையும் பலாத்காரத்தால், கொலையால்தான் மக்களிடையே பரப்பி இருக்கின்றனரே தவிர அன்பாலல்ல. கடவுள் நம்பிக்கையற்றவர்களையெல்லாம் கொடுமைகள் செய்து அழித்து ஒழித்திருக்கின்றனர். நாம் இன்னமும் இந்த அளவிற்கு வரவில்லை.

பகுத்தறிவு என்பது அறிவைக்கொண்டு சிந்திப்பது. அனுபவத்திற்கு ஏற்றதைப் பஞ்சேந்திரியங்களால் உணர்ந்து கொள்ளக்கூடியதை ஏற்றுக்கொள்வதாகும். அதற்கு மாறானது எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளாததாகும். அதனைப் பரப்புவதே இக்கழகத்தின் கொள்கையாகும்.

[15.12.1970 அன்று தருமபுரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை (விடுதலை, 30.1.1971)]

ஜாதியொழிந்த சமுதாயமும்




ஜாதியொழிந்த சமுதாயமும், தனிச் சுதந்திர ஆட்சியுமே நமக்குத் தேவை



வைதீகத் திருமணங்கள் மூலம் பார்ப்பனர்கள் ஜாதி வேறுபாடுகளை நிலை நாட்ட ஒரு பிரசார முறையாக ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சடங்கு முறைகள் என்பவை ஜாதிகளை நிலை நாட்டவே ஏற்பட்டனவாகும்.

அவரவர்கள் நான் இன்ன ஜாதி, என்னுடைய குல ஆசாரம் இப்படித்தான் என்று ஒரு பெருமையாகக்கூடப் பேசிக் கொண்டு ஒவ்வொரு முறையைக் கையாளுகின்றனர். இதன் மூலம் அவரவர்கள் அடிக்கடி தன் ஜாதியை நினைவூட்டி அதை மறந்துவிடாமல் உரிமை கொண்டாடி நிலைத்திருக்கச் செய்யும் வழியேயாகும்.

மேலும், இன்றைக்கு நடைபெறும் திருமணம் கலப்புத் திருமணம் என்ற பேரால் நடைபெறுகிறது. ஆனால், இதுவரை இதுபோன்ற கலப்புத் திருமண முறைகளுக்குப் பெரும் எதிர்ப்புகள் இருந்து வந்தன. இப்போது சாதாரணமாக எங்கிலும் இம்முறை நடைபெறுவதற்கு ஆரம்பித்துவிட்டன.

ஆனால், இனிமேல் உண்மையில் கலப்புத் திருமணம் என்று கூறவேண்டுமானால், பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் இருவருக்கும் நடைபெறும் திருமணம்தான் கலப்புத் திருமணம் என்று கூறவேண்டும். ஜாதிகளுக்குள் மிக உன்னதஜாதி என்றும், கடவுளுக்கு அடுத்த அந்தஸ்து உள்ள ஜாதி என்றும் கூறப்படும் பார்ப்பனர் ஜாதிதான் தலைதூக்கி நிற்கிறது. அதற்கும் பார்ப்பனர் அல்லாத ஜாதிக்கும்தான் அதிக வேற்றுமை கூறப்படுகிறது.

இதையன்றி பார்ப்பனர் அல்லாத சூத்திரஜாதி என்று கூறப்படுகிற ஜாதிதான் சமுதாயத்தில் மிகவும் கீழானது என்றும், சமுதாயத்தில் கடை ஜாதி என்றும் நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த வேற்றுமை ஒழிய வேண்டும். இவ்விரண்டு ஜாதிகளுக்கும் திருமணம் நடைபெறுவதைத்தான் கலப்புத் திருமணம் என்று கூறலாம்.

இப்போதுகூட மந்திரிகளும் அரசாங்கத் தலைவர்களும் ஜாதியைப் பற்றிக் கண்டித்துப் பேசி வருகிறார்கள். ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறுகிறார்கள். இவர்கள் கூறுவதைச் செய்கையில் நடத்திக் காண்பிக்கப் போதிய திறன் இல்லாவிடினும் நாம் கூறுகிறதையாவது ஓரளவுக்கு ஒப்புக் கொள்ளும் அளவுக்கு வந்துள்ளார்கள்.

மேலும், அவர்கள் கூறுவதை நம்புவதற்கும் முடியவில்லை. ஏனெனில் தேர்தல் நெருங்குதற்கு ஆரம்பிக்கவும், தேர்தலில் மக்களை வசப்படுத்தும் வழியில் ஈடுபட தந்திரமாகலாம். இதுவும் தேர்தல் பிரசார முறைகளில் ஒன்று என்றுதான் கருத வேண்டியதாக இருக்கிறது.

ஏனெனில், அவர்கள் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்ற உண்மை நோக்கத்துடன் கூறுவார்களானால் மதம், சாஸ்திர, புராணங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும். கடவுள்களை அழிக்க வேண்டும். கோயில்களை இடிக்கவேண்டும். ஆனால், இவர்களோ சாஸ்திர புராணங்களையும், கோயில்களையும், கடவுள்களையும் வைத்துக் கொண்டு எப்படி ஜாதியை ஒழிக்க முடியும்?

எவற்றின் பேரால் ஜாதி உண்டாக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றனவோ அந்த மூலகாரணத்தை அழிக்காமல் அவற்றை வைத்துக் கொண்டு, ஜாதி ஒழிய வேண்டும் என்று வாயினால் மட்டும் சொல்லிவிட்டால், ஜாதி ஒழிந்துவிடுமா? எனவே, அப்படிக் கூறுகிற வார்த்தை வீண் வாய் ஜால ஏமாற்று வித்தைக்கான வார்த்தைகள் என்றுதான் கருத வேண்டும்.

ஆனால், நாங்களோ ஜாதியை ஏற்படுத் திய மதம் ஒழிய வேண்டும். மதத்தை நிலைநாட்டும் கடவுள்கள், சாஸ்திர, புராணங்கள் ஒழிய வேண்டும் என்று முயற்சிப்பவர்கள். ஆகவே, ஜாதி மட்டுமல்ல, அதன் அடிப்படைகள் அத்தனையும் அழிக்கப் படவேண்டும். அடியுடன் எரித்து சாம்பலாக்கப்பட வேண்டும். குப்பையில் போட்டு கொளுத்தப்பட வேண்டும். மூலைக்கு மூலை போட்டு உடைத்துத் தூளாக்கப்பட வேண்டும் - என்று முயற்சித்து வருகிறோம்.


(9.1.1956 இல் தூத்துக்குடியில் நடைபெற்ற மணவிழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய வாழ்த்துரை - `விடுதலை, 18.1.1956)


இன்றைக்கு மந்திரிகள் எல்லாம் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறி வருகிறார்கள். இதுவரை ஜாதியைப் பற்றிக் கவலைப்படா தவர்கள் எல்லாம் இப்போதுதான் ஜாதியின் கொடுமைகளைத் தெரிந்திருக்கிறார்கள். இவர்கள் கூறுவதில் எவ்வளவு உண்மையாக இருக்கிறார்கள் என்று பார்த்தோமானால் மிகக் கேவலம்.

ஏனெனில் தேர்தல் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. அதற்கு மக்களை வசப்படுத்தப் பாடுகின்ற பாட்டு என்று தான் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. ஏனெனில் நேரு ஜாதி ஒழியவேண்டும் என்கிறார். ராஜேந்திரப் பிரசாத்தும் ஜாதி ஒழிய வேண்டும் என்கிறார். ஆச்சாரியாரும் சாடையாக ஜாதியை எதிர்க்கிறார்.

இவர்கள் எல்லாம் உண்மையில் எதிர்ப்பவர்களா? இவர்களிடம் ஜாதி வேறுபாட்டை வைத்துக் கொண்டு எதிர்க்கிறார்கள் என்றால், அது பெரும் பித்தலாட்டம் என்றுதானே நினைக்க வேண்டியதாக இருக்கிறது. தன் நெற்றியிலேயே பார்ப்பனன் என்று எழுதி ஒட்டிக் கொண்டு, ஜாதி ஒழிய வேண்டும் என்றால், எவ்வளவு முட்டாள்தனமோ அப்படித்தான் இருக்கிறது.

இவர்கள் எல்லாம் முதலில் தங்களிடமுள்ள பூணூலை அறுத்து எறிந்துவிட்டு, ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறினால், ஒருவாறு உண்மையான சொல் என்று கூறலாம். பூணூலையும் அணிந்து கொண்டு, பூணூலும் வேண்டும், ஜாதியும் ஒழிய வேண்டும் என்றால், ஏய்க்கும் வித்தை என்றுதானே கொள்ள வேண்டும்?

இவர்களைப் பூணூல் எதற்கு என்று கேட்டால் ஜாதியைக் குறிப்பிடுவதற்கு என்று கூறாமல் வேறு என்ன கூறுவார்கள்? அரிப்பு எடுத்த பொழுது முதுகைச் சொறிந்து கொள்ள இருக்கிறது என்றா கூறுவார்கள்? மேலும் கோயில்களும் சாமிகளும் எதற்கு? சாஸ்திரங்களும் புராணங்களும் எதற்கு? இவை ஜாதியை நிலைநாட்டத்தானே இருக்கின்றன?

எனவே, இவர்கள் எல்லாம் உண்மையில் ஜாதி ஒழிய வேண்டும் என்று விரும்புவார்களானால், கோயில்களை இடிக்கவும், கடவுள்களைப் போட்டு உடைக்கவும், சாஸ்திர புராணங்களைப் போட்டுக் கொளுத்தவும் இவர்கள் முற்படவேண்டும். ஆனால், இவற்றையும் வைத்துக் கொண்டு கூறுகின்ற வார்த்தைகள் ஏமாற்றும் வித்தைதானேயன்றி வேறில்லை.


(8.1.1956 இல் மதுரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு - `விடுதலை, 17.1.1956).

2 Jun 2011

அம்பேத்கர் சிந்தனைத்துளிகள்


புத்தம், நீதி நூலை அடிப்படையாகக் கொண்டது. புத்தர் ஒரு வழிகாட்டியாக நடந்து கொண்டார். கடவுளாக அல்ல.

இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ஜாதிகளும், மூடத்தனங்களும் இருந்துகொண்டிருக்கும் நாள்வரைக்கும் நாம் பிற நாடுகளின் முன்பாக தலை நிமிர்ந்து வாழ இயலாது.

தீண்டாமை, மதத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல; பொருளாதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இது, அடிமைத்தனத்தைக் காட்டிலும் மிகவும் மோசமானது.


ஒரே பக்கத்தில் இரண்டு சிறகுகளை உடைய ஒரு பறவைக்கு எப்படிப் பறக்க இயலாதோ, அப்படியே விதிவிலக்கு அடங்கிய ஒரு மதத்தைப் பின்பற்றும் சமூகத்திற்கு முன்னேற்றம் முடியாது..

மலைக்கும், நதிக்கும், காற்றுக்கும், நீருக்கும், புத்தகங்களுக்கும்கூட பெண்பாலை முன்னிறுத்திப் பெருமை சேர்ப்பதாகப் பாசாங்கு செய்கின்றார்கள்.

இந்தியா \ பாகிஸ்தான் நட்புறவு ஒரு பகற்கனவாகும். இஸ்லாமின் கொள்கை \ வேறுபாடு \ பண்பாடு ஆகியவை வேறு எந்த ஒரு மத ஆதிக்கத்தின் கீழும் இருக்கக் கூடாது என்பதை வேறுவகையில் வெளிக்காட்டுவதுதான் பாகிஸ்தான் என்பது.

சீர்திருத்தக்காரர்களை இம்சிப்பதற்கும், சீர்திருத்த இயக்கங்களை ஒழிப்பதற்கும் வைதிகர்களுக்கு ஜாதி ஒரு ஏற்ற கருவியாக அமைந்துள்ளது.

வழிகளையும், முறைகளையும் நீங்கள் சரியாக அறிந்து கொள்ளாவிட்டால் உங்கள் முயற்சிகள் எல்லாம் வீணாவது நிச்சயம்.